"காக்கிக்குள் ஈரம்" திடீரென உயிரிழந்த காவலர்! குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிதியளித்த சக காவலர்கள்!
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே, உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்திற்கு, அவருடன் பணியாற்றிய சக காவலர்கள் சுமார் 30 லட்சம் ரூபாய் நிதி வழங்கிய சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'காவல்துறையினர்' பொதுமக்களின் நண்பர் என்ற கொள்கையின்படி பணியாற்றி வரும் போலீசார், வயதானவர்கள், ஊனமுற்றோர் உள்ளிட்டோருக்கு உதவிகளை செய்து அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருவது உண்டு.
இதேபோல், தங்களுடன் பணியாற்றிய காவலர்கள் திடீரென உயிரிழந்தால், அவர்களின் குடும்ப சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு தங்களால் இயன்ற உதவிகளையும் செய்து வருகின்றனர். அந்த வகையில், கோவையில், உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கி, அவருடன் பணியாற்றிய சக காவலர்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

தலைமைக் காவலர்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் அடுத்துள்ள காரமடை காவல் நிலையத்தில் தலைமைக்காவலராக பணியாற்றி வந்த தாமோதரன் என்பவர், கடந்த சில மாதங்களுக்கு இயற்கையான முறையில் உயிரிழந்தார். தங்களுடன் பணியாற்றிய தலைமைக் காவலர் உயிரிழந்ததால், அவரின் குடும்பத்தார் நிர்கதியாய் தவிப்பதைப் பார்த்து, அவருடன் பணியாற்றிய காவலர்கள் மனவேதனை அடைந்தனர்.

சக காவலர்கள் நிதியுதவி
இதனையடுத்து, மறைந்த தலைமைக் காவலர் தாமோதரனை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க அவருடன் பணியாற்றிய சக காவலர்கள் முடிவு செய்தனர். இதற்காக உதவும் கரங்கள் குழு மூலம் காவலர்களை ஒன்றிணைத்து நிதியளிக்கும் பணியை துரிதப்படுத்தினர். அதன்படி, காவலர்கள் சார்பாக அன்பளிப்பாக வழங்கப்பட்ட ரூ.29,32,500-ஐ, ஆலாங்கொம்பு பகுதியில் உள்ள தலைமைக் காவலர் தாமோதரனின் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தினரிடம் வழங்கினர்.

காவலர்களுக்கு நன்றி
தனது கணவருடன் பணியாற்றிய காவலர்கள் ஒன்றிணைந்து, நிதி திரட்டி வழங்கிய தொகையை பெற்றுக்கொண்ட தலைமைக் காவலர் தாமோதரனின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும், தங்களுக்கு ஆதரவு கரம் நீட்டிய சக காவலர்கள் அனைவருக்கும் கண்ணீர் மல்க நன்றியை காணிக்கையாக்கினர்.

நெகிழ்ச்சி சம்பவம்
எல்லாத்துறைகளுக்கும் சங்கங்கள் இருந்தாலும், மக்களை பாதுகாத்து வரும் காவலர்களுக்கு என்று தனிச்சங்கம் ஏதும் இல்லை. எனினும், சக காவலரின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத அவருடன் பணியாற்றிய காவலர்கள், ஒன்றிணைந்து உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கிய சம்பவம், அனைத்து தரப்பினரிடையேயும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications