வாடிக்கையாளர்களின் கையெழுத்தை போட்டு ரூ26 லட்சம் நூதன மோசடி... கோவையில் பகீர்! என்ன நடந்தது?
கோவை : கோவையில், வாடிக்கையாளர்கள் மற்றும் உறவினர்கள் பெயரில் போலியாக கையொப்பமிட்டு, நிதி நிறுவன அதிகாரிகளே நகைகளை அடமானம் வைத்து நூதன முறையில் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை நடத்துபவர்களுக்கு பெரும் தலைவலியாக இருப்பவர்கள் முகமூடி கொள்ளையர்கள்தான். ஆனால், முக முடிகொள்ளையர்களுக்கே சவால் விடும் வகையில், டிப் டாப் ஆசாமிகளின் அட்டகாசம் தற்போது தலைவிரித்தாடுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், யாரை நம்பி உடமைகளை ஒப்படைப்பது என்று தெரியாமல் வாடிக்கையாளர்களும் விழி பிதுங்குகின்றனர். இப்படிப்பட்ட நூதன திருட்டு சம்பவம், கோயம்புத்தூரில் அரங்கேறியுள்ளது.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஐசிஎல் ஃபின்கார்ப் என்ற தனியார் நிறுவனம், நகைகளை அடகு வைத்து வட்டிக்கு பணம் வழங்கி வருகின்றது. இந்த நிறுவனத்தின் கோவை குனியமுத்தூர் கிளையின் தலைவராக கார்திகா, மேனேஜராக சரவணகுமார், நிதி நிறுவன கிளையின் துணை தலைவராக சத்யா ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

நிதிநிறுவன அதிகாரிகள் கூட்டு சதி
இந்நிலையில், வருடாந்திர தணிக்கைக்காக இந்த கிளையில் தங்க நகைகளை சரிபார்க்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது லாக்கரில் போலி நகைகள் வைத்திருப்பதைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து, அந்த கிளையில் பணியாற்றியவர்களிடம் விசாரணை நடத்தியதில், கிளையில் தலைவர் கார்திகா, மேனேஜர் சரவணகுமார், நிதி நிறுவன கிளையின் துணை தலைவர் சத்யா ஆகியோர் கூட்டு சதியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

போலி கையெப்பமிட்டு நூதன மோசடி
அதாவது, இந்த கிளையில் வரவு செலவு வைத்திருந்த வாடிக்கையாளர்கள், உறவினர்கள் என 10க்கும் மேற்பட்டோரின் ஆவணங்களை பயன்படுத்தி, போலி கையொப்பமிட்டு, நூதன மோசடியில் இந்த மூவரும் ஈடுபட்டுள்ளனர். அதாவது, 597 கிராம் போலி நகைகளை, 25 பொட்டலங்களை வைத்து, வாடிக்கையாளர்களுக்கு கடன் தந்ததுபோல கணக்கு காட்டி, 26 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துள்ளனர்.

லாக்கரில் போலி நகைகள்
நிதி நிறுவனத்தில் பணத்தை கொள்ளையடித்தது மட்டுமின்றி, அடகு வைக்க வந்த 11 நகை பொட்டலங்களில் இருந்த 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான 227 கிராம் தங்க நகைகளை எடுத்துவிட்டு, அதற்கு பதிலாக போலி நகைகளை பாக்கெட்டில் அடைத்து லாக்கரின் அடகு நகையாக கணக்கு காட்டியுள்ளனர்.

கிளையின் துணை தலைவர் கைது
இதுகுறித்தி நிதி நிறுவனம், மாநகர குற்றப்பிரிவு போலீசிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் உதவி ஆணையாளர் பார்த்திபன் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர் ரேணுகா வழக்கு பதிவு செய்து, சத்யாவை கைது செய்தார். மேலும், போலி நகைகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான கார்த்திகா, சரவணகுமாரை தனிப்படை போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நூதன முறையில் திருடிய பணம் மற்றும் நகைகளை, இந்த மூன்று பேரும் பங்கிட்டு வீடு கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தியிருக்கலமென தகவல்கள் வெளியாகியுள்ளன. நிதி நிறுவனத்தில் முகமுடிகளை அணிந்து கொள்ளையடிப்பவர்களை விட கோட் சூட் அணிந்து கொள்ளையடிக்கும் கொள்ளயர்களால், வாடிக்கையாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications