21 மாதங்களுக்கு பிறகு.. தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு பேருந்துகள் இயக்கம்.. எங்கெங்கே? முழு விவரம்
கோவை: கொரோனா தொற்று ஆதிக்கம் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் இருந்து கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு அரசு பேருந்துகள் சேவை நிறுத்தப்பட்டன. அதன்பின்னர் கொரோனா குறைந்து கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன.
ஆனால் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு மட்டும் பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்து வந்தது. இதனால் கேரளா செல்லும் பயணிகளும், கேரளாவில் இருந்து வரும் பயணிகளும் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.

தமிழக அரசு அனுமதி
இந்த நிலையில் கேரளாவில் வேலை பார்க்கும் தமிழர்களை கருத்தில் கொண்டும், தமிழகத்தில் படிக்கும் கேரள மாணவர்களை கருத்தில் கொண்டும் பேருந்து சேவை தொடங்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். இதனை தொடர்ந்து இன்று முதல் கேரளாவுக்கு பொது போக்குவரத்தை தமிழக அரசு அனுமதித்தது.

கேரளாவுக்கு பேருந்துகள் இயக்கம்
அதன்படி இன்று காலை முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கேரளாவுக்கு பேருந்துகள் இயக்கப்டுகின்றன. கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், மூணாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பயணிகள் பேருந்து இயக்கப்படுகிறது. பொள்ளாச்சியில் இருந்து பாலகாட்டுக்கும் பேருந்துகள் இயக்கப்டுகின்றன. கேரளாவில் இருந்தும் இந்த பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தேனி, களியக்காவிளை
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கேரளாவின் கோழிக்கோடு, சுல்தான் பத்தேரி ஆகிய இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தேனியில் இருந்து மூணாறுக்கும், கட்டப்பனா, ஏலப்பாறை உள்ளிட்ட பகுதிகளும் பேருந்துகள் செல்கின்றன. குமரி மாவட்டம் களியக்காவிளைக்கு திருவனந்தபுரத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன.

தென்காசி- கொட்டாரக்கரை
தென்காசியில் இருந்து கேரளாவின் கொட்டாரக்கரைக்கும், கொட்டாரக்கரையில் இருந்து தமிழகத்துக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நீண்ட மாதங்களுக்கு பிறகு கேரளாவுக்கு நேரடி பேருந்து இயக்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது சபரிமலை ஐயப்பன் சீசன் என்பதால் ஐயப்ப பக்தர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே வேளையில் பேருந்தில் வரும் பயணிகள் தமிழக-கேரள எல்லையில் பலத்த கொரோனா பரிசோதனைக்கு பின்னரே தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.












Click it and Unblock the Notifications