கோவையில் மற்றொரு ஷாக்.. பேக்கரி ஓனருக்கு ஓங்கி ஒரு "பளார்" தரதரவென இழுத்து.. போலீஸ் எஸ்.ஐ அட்டூழியம்
கோவை: கோவை காவல்துறையினருக்கு என்ன கெட்ட நேரமோ தெரியவில்லை, வரிசையாக சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள்.
கோவை காந்திபுரம் வெளியூர் பேருந்து நிலையம் பகுதியில், மோகன்ராஜ் என்பவர் ஸ்ரீ ராஜா என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார்.
இந்த ஓட்டலில் தமிழக அரசின் உத்தரவின்படி கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் செயல்படுவதாகவும், இரவு 11 மணி வரை செயல்படுவதாகவும் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
கோவை ஓட்டலில் புகுந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களை லத்தியால் தாக்கிய எஸ்ஐ இடமாற்றம்
பசித்த வயிற்றுக்கு சோறு
இந்நிலையில், நேற்று இரவு 10.20 மணிக்கு ஓசூரில் இருந்து வந்த பயணிகள், பசிக்கிறது என கூறியதால் வேறு வழியில்லாமல், அவர்களுக்கு உட்கார வைத்து, உணவு வழங்கப்பட்டிருக்கிறது. அப்போது, ஹோட்டலின் ஷட்டர் பாதி அளவு அடைக்கப்பட்டு புதிய வாடிக்கையாளர்கள் வருகை தராமல் தடுக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த காட்டூர் காவல் நிலைய எஸ்ஐ முத்து ஓட்டலின் உள்ளே நுழைந்து சாப்பிட்டு கொண்டிருந்தவர்களை லத்தியால் தாக்கியுள்ளார்.
வெளியான அடாவடி வீடியோ
இந்த காட்சிகள் ஹோட்டலில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இது ஊடகங்களில் வெளியானதும், எஸ்ஐ முத்து கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார். ஆனால், தாமாக முன்வந்து மனித உரிமை ஆணையம் இச்சம்பவத்திற்கு உரிய விளக்கம் அளிக்குமாறு மாநகர காவல் ஆணையருக்கு உத்திரவிட்டுள்ளது.
அடுத்த சம்பவம்
ஹோட்டலுக்குள் புகுந்த காவல்துறையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி அடங்குவதற்குள் இன்னொரு சம்பவமும் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேக்கரி உரிமையாளர் ஒருவரை உதவி ஆய்வாளர் கணேஷ் என்பவர் அடித்து இழுத்துச்செல்லும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உள்ளே புகுந்து அடி
குனியமுத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பேக்கரியை மூடச்சொல்லி உதவி ஆய்வாளர், அதன் உரிமையாளரை தாக்கி இழுத்துச்செல்லும் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொரொனா தொடர்பான கடும் நடைமுறைகள் இல்லாத , கடந்த மார்ச் மாதம் 29ம் தேதி இரவு 10.30 மணியளவில் குனியமுத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளி அருகே உள்ள பேக்கரியை மூடச்சொல்லிவிட்டு, குனியமுத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணேஷ் , பேக்கரி உள்ளே புகுந்து
உரிமையாளரை தாக்கி, அடித்து இழுத்துச்சென்றுள்ளார்.
கன்னத்தில் விழுந்த அறை
"பளார்" என கன்னத்தில் அறைந்து, சட்டையை பிடித்து இழுத்துச் சென்றுள்ளார் சப் இன்ஸ்பெக்டர். இரவு 11 மணி வரை பேக்கரி நடத்த அனுமதி இருந்தும் 10.30 மணியளவில் உரிமையாளரை தாக்கி அடித்து இழுத்துச்செல்லும் காட்சி பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.
ஏன் இந்த ஆத்திரம்
பேக்கரியில் பன், மிக்சர் போன்றவற்றை ஓசியில் கேட்டோ, ஹோட்டலில் இட்லி, தோசை, வடை போன்றவற்றை ஓசியில் கேட்டோ உரிமையாளர்கள் கொடுக்காத கோபத்தில் இப்படி போலீசார் நடந்து கொள்கிறார்களா என்ற கேள்விகள் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களால் முன்வைக்கப்படுகிறது. இது அப்பட்டமான மனித மாண்புக்கும், மனித உரிமைக்கும் எதிரான செயல், இதுபோன்ற அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.