தமிழகத்தில் காவிதான் பெரியது.. வலிமையானது.. ஆளுநர் தமிழிசை அதிரடி பேச்சு
கோவை: ‛‛ஆன்மிகம் தான் தமிழை வளர்த்தது. காவி ஆன்மிகத்தை குறிக்கிறது. ஆகவே தான் தமிழகத்தில் காவி பெரியதாகவும், வலிமையாக உள்ளது'' என தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.
கோவை பேரூர் பகுதியில் சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லூரி மற்றும் தேசிய சிந்தனைக்கழகம் (அகில பாரத பிரக்ஞா பிரவக்கின் தமிழக கிளை) இணைந்து இன்று முப்பெரும் விழா நடத்தியது.
இந்த விழாவில் தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

ஆண்களுக்கு சமமாக பெண்கள்
பெண்களின் வளர்ச்சியை பொறுத்து தான் நாட்டின் வளர்ச்சியை குறிப்பிட முடியும் என சொல்கின்றனர். இங்கு ஆண்களுக்கு சமமாக பெண்கள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 75ம் ஆண்டு சுதந்திர தினத்தை ஓராண்டு கொண்டாட உத்தரவிட்ட பிரதமர் மோடிக்கு நன்றி. தற்போதுள்ள இளைஞர்களுக்கு சுதந்திரம் குறித்து தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக பிரதமர் இவ்வாறு அறிவித்துள்ளார். சுதந்திரத்திற்காக பல சுதந்திர வீரர்களை கண்டது இந்த தமிழகம்.

ஆன்மிகத்தால் வளர்ந்த தமிழ்
ஆன்மிகத்தை விடுத்து தமிழ் வளர்ச்சி கிடையாது. ஆன்மிகம் தான் தமிழை வளர்த்தது என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. தமிழால் கோவில் கதவுகள் திறந்ததையும் தமிழால் கோவில் கதவுகள் மூடியதையும் நாம் பார்த்துள்ளோம். தமிழால் அனைத்தும் முடியும். ஆன்மிகம் இல்லாமல் தமிழ் கிடையாது. தமிழ் இல்லாமல் ஆன்மிகம் கிடையாது என்பதை உணர்த்தியது மடங்கள்தான்.

காவி தான் பெரியது
என்னை பற்றி யார் என்ன சொன்னாலும், என்ன எழுதினாலும் நான் துணிச்சலோடு இருக்கிறேன். அதற்கு காரணம் நான் மக்கள் சேவை, தமிழ் சேவை, ஆன்மிக சேவை செய்து வருவதுதான். கருப்பை (மறைமுகமாக திராவிடத்தை குறிப்பிடுகிறார்) மட்டுமே பேசுபவர்கள், காவியின் கருத்தை அறிய முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. காவி ஆன்மிகத்தை குறிக்கிறது. ஆகவே தான் தமிழகத்தில் காவி பெரியதாகவும், வலிமையாக உள்ளது. நான் தேசிய கொடியில் உள்ள காவியையும், அடிகளார்கள் அணிந்திருக்கும் காவியையும் தான் கூறுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

அவமரியாதை கூடாது
அதன்பிறகு தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‛‛ஆளுநர்களும் மரியாதைக்குரியவர்கள் தான். சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் கருத்து வேறுபாடு இருக்கிறது என்பதற்காகவே ஆளுநர்களை அவமரியாதையும், தரக்குறைவாக நடத்துவதை நிறுத்து கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பம். அனைவருக்கும் இருப்பது போல் எங்களுக்கும் அதிகாரம், பேச்சுரிமை உள்ளது. அம்பேத்கர் கொடுத்த அரசியலமைப்பு சட்டத்தின்படி நாடு செயல்பட்டு வருகிறது. ஆளுநர்கள் எல்லோருமே நாட்டு மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள் தான். தனிப்பட்ட முறையில் மாநிலங்களுக்கு பிரச்சனை உள்ளது. பேசி தீர்க்க முடியாத பிரச்சனை என்று ஒன்று கிடையாது'' என்றார்.












Click it and Unblock the Notifications