கோவையில் மதுபானம் கலந்த ஐஸ்க்ரீம் விற்பனை - கடைக்கு சீல் வைக்க உத்தரவிட்ட மா.சுப்ரமணியன்
கோவையில் மதுபானம் கலந்த ஐஸ்கிரீம் விற்பனை செய்த கடைக்குச் சீல் வைக்க மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
கோவை: ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை செய்த கடைக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டுள்ளது. சோதனையின்போது உணவு தயார் செய்யும் இடத்தில் 2 மதுபாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஐஸ்கிரீம் என்றாலே அனைவருக்கும் விருப்பம்தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். வெயில் காலம் மட்டுமல்ல குளிர்காலத்திலும் கூட ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்கள் அதிகம் உள்ளனர்.

கோவை லட்சுமிமில் அருகே தனியாருக்கு சொந்தமான வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள ஐஸ்கிரீம் கடையில் ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து ரோலிங் டப் கபே என்ற ஐஸ்கிரீம் கடையில் சோதனை செய்ய மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உத்தரவிட்டார்.
அமைச்சரின் உத்தரவின் பேரில் கோவை மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சோதனையின்போது உணவு தயார் செய்யும் இடத்தில் 2 மதுபாட்டில்கள் காணப்பட்டுள்ளன. அதேபோல காலாவாதியான உணவு பொருட்களைக் கண்டறிந்து அலுவலர்கள் அழித்துள்ளனர். ஆய்வின்போது உணவு கையாளுபவர்கள் உரிய மருத்துவ தகுதிச்சான்று பெறப்படவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
உணவு தயார் செய்யும் இடத்தில் ஈக்கள் அதிகளவில் காணப்பட்டதாகவும் முறையான பூச்சி தொற்று நீக்கம் செய்து அதற்கான பதிவேடுகள் பராமரிக்கப்படவில்லை.
உணவு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தண்ணீர் முறையாக ஆய்வு செய்து அறிக்கை பெறப்படவில்லை என்றும் உணவு கையாள்பவர்கள் முறையான முகக்கவசம், தலை உறை, கையுறை அணிந்து பணிபுரியவில்லை எனவும் கூறப்படுகிறது.
உணவு தயாரிக்கும் இடம் சுகாதாரமின்றி இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பு துறையின் கீழ் பெறப்பட்ட உரிமம் பிரதான இடத்தில் காட்சிப்படுத்தப்படவும் இல்லை.
இவ்வளவு குறைபாடுகள் இருக்கும் காரணத்தினால் ஐஸ்கிரீம் கடைக்கு உரிய உரிமம் ரத்து செய்யப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் வந்து செல்லும் வணிக வளாகத்தில் உள்ள கடையில் மதுபானம் கலந்து ஐஸ்கிரீம் விற்பனை செய்த சம்பவம் கோவையில் வசிக்கும் மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications