கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு..விமான நிலையங்களில் பரிசோதனையை கட்டாயமாக்க மத்திய அரசு உத்தரவு
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் குரங்கு அம்மை பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டு பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
கோவை: நாட்டில் குரங்கு அம்மை நோய் பரவலைக் கட்டுப்படுத்த, இந்தியா வரும் அனைத்து சர்வதேச பயணிகளின் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு இருப்பதால், தமிழக- கேரள எல்லையில் உள்ள 13 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரமாக நடந்து வருகிறது என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
Recommended Video
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்ட நிலையில், துபாயில் இருந்து 2 நாட்களுக்கு முன்பு கேரளா வந்த கன்னூர் மாவட்டத்தை நபரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையின் முடிவில் அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நாட்டில் உள்ள முக்கிய விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் பணியாற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் பிராந்திய அலுவலகங்களைச் சேர்ந்த இயக்குநர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குரங்கு அம்மை
இந்த கூட்டத்தில் நாட்டில் குரங்கு அம்மை நோய் பரவலைக் கட்டுப்படுத்த, இந்தியா வரும் அனைத்து சர்வதேச பயணிகளின் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் குரங்கு அம்மை நோய் குறித்தும், தடுப்பு முறைகள் குறித்தும் மருத்துவ விளக்கக் காட்சிபடி இந்த கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது.

69 நாடுகளில் குரங்கு அம்மை பரவல்
கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் அமைக்கப்பட்டு உள்ள குரங்கு அம்மை நோய் தடுப்பு கண்காணிப்பு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், உலகளவில் 63 நாடுகளில் குரங்கு அம்மை நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. நமது நாட்டில் கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலத்தில் தலா ஒருவருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

பன்னாட்டு விமான நிலையங்கள்
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் குரங்கு அம்மை பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டு பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த மாதத்தில் பயணிகளுக்கு நடத்தப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை அல்லது கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை.

தனிமை சிகிச்சை
யாருக்காவது தொற்று கண்டறியப்பட்டால் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க ஒரு படுக்கை வசதியுடன் கூடிய அறை கோவை விமான நிலையத்தில் தயார் நிலையில் உள்ளது. மேலும் தமிழகத்தில் யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு இருப்பதால், தமிழக- கேரள எல்லையில் உள்ள 13 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரமாக நடந்து வருகிறது.

கொப்புளங்கள்
குறிப்பாக பெரியவர்கள், குழந்தைகளுக்கு முகம் மற்றும் முழங்கைக்கு கீழ் பகுதியில் புதிதாக கொப்பளங்கள் உள்ளதா என்றும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. குரங்கு அம்மை பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விமான நிலையங்களில் ஸ்லைடுகள் மற்றும் போஸ்டர்கள் திரையில் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன. நகர பகுதிகளில் பொது சுகாதாரத்துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications