"சபலம்.." கோவையில் இளம்பெண் தாய்ப்பால் கொடுப்பதை வீடியோ எடுத்த முதியவர்..அடித்தே கொலை செய்த கும்பல்
கோவை: கோவையில் இளம்பெண் தாய்ப்பால் கொடுப்பதை வீடியோ எடுத்த நபரை அங்கிருந்த நபர்கள் அடித்தே கொலை செய்த ஷாக் சம்பவம் அரங்கேறியுள்ளது.
நமது நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. பாலியல் ரீதியாகப் பெண்களைக் குறிவைத்து நடத்தப்பட்டு வரும் குற்றங்கள் சமீப காலங்களில் அதிகரித்துள்ளது.

அதிலும் தற்போது வயதான நபர்களும் இதுபோன்ற மோசமான காரியங்களில் ஈடுபடுகிறார்கள். தங்கள் வயதை அட்வான்டேஜாக பயன்படுத்திக் கொள்ளும் இவர்கள், மோசமான செயல்களைச் செய்கிறார்கள்.
அப்படியொரு மிக அருவருக்கத்தக்க குற்றச் செயலில் தான் கோவையைச் சேர்ந்த முதியவர் ஒருவர் ஈடுபட்டுள்ளார். அப்போது பெண் அலறிய நிலையில், அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் இந்த முதியவரை அடித்தே கொன்றுள்ளனர். இந்த கொடூர சம்பவம் ஒட்டுமொத்தமாக கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஷாக் சம்பவம்: கோவை மாவட்டம் சாய்பாபா காலனி அருகே கே.கே.புதூர் அமைந்துள்ளது. இங்குள்ள கால்வாயில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதியவர் ஒருவரின் சடலம் இருந்தது. முதியவர் சடலத்தைக் கால்வாயில் பார்த்த அங்குள்ள அக்கம் பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், முதியவரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனை செய்யக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த முதியவரின் தலையில் காயம் இருந்ததால் இது கொலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில், விசாரணையில் போலீசாருக்கு சில அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்தது.. விசாரணையில் அந்த முதியவர் அதே கேகே புதூர் பகுதியைச் சேர்ந்த முஸ்தாக் என்பது தெரிய வந்தது. 58 வயதான அவர், தனியார் ஷோரூமில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்துள்ளார்.
சந்தேகம்: சடலத்தை ஆய்வு செய்த போது அவரது தலையின் பின்புறம் காயம் இருந்த நிலையில், அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர். விசாரணையில் போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். அவர்கள் மூன்று பேரும் இணைந்து முஸ்தாக்கை சரமாரியாகத் தாக்கியதும் அதன் பிறகு சாக்கடை கால்வாயில் தூக்கி வீசியதும் தெரியவந்தது.
இதில் அந்த முதியவருக்குத் தலையின் பின்புறம் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த காயம் மோசமானதாக இருக்கவே அவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த ராகுல் (24), மணிகண்ட மூர்த்தி (26), மனோஜ் (27) ஆகியோரை கைது செய்தனர். மேலும், அந்த கொலைக்கு என்ன காரணம் என்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கோவை போலீசார்: இது குறித்து அப்பகுதியில் உள்ள போலீசார் கூறுகையில், "இங்கே கேகே நகர் பகுதியில் பல ஓட்டு வீடுகள் உள்ளன. அப்படி ஒரு வீட்டில் இளைஞர் ஒருவன் தனது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் வசித்து வருகிறார். அந்தத் தம்பதிக்குச் சமீபத்தில் தான் குழந்தை பிறந்திருந்தது. அந்த இளைஞரின் மனைவி வீட்டிற்குள் வைத்து குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துள்ளார். அப்போது வீட்டின் மேல் ஏறிய முஸ்தாக், சில ஓடுகளைப் பிரித்துள்ளார்.
மேலே இருந்த படி அந்த பெண் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதை வீடியோவாக எடுத்ததாக சொல்கிறார்கள். இதைப் பார்த்த அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். உடனே அங்கிருந்து முஸ்தாக் தப்பி ஓட முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த ராகுல், மணிகண்டமூர்த்தி, மனோஜ் ஆகியோர் இணைந்து முஸ்தாக்கை சரமாரியாக அடித்துள்ளனர்.
இதில் அவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்துவிட்டார். இந்த விவகாரத்தில் 3 பேரைக் கைது செய்துள்ளோம், அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.. இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications