அன்னூர் அரசு மருத்துவமனையில் திடீர் பவர் கட்.கர்ப்பிணி அலைக்கழிப்பு..பிரசவித்த பின் உயிரிழந்த சோகம்
கோவை: அன்னூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சையின் போது, மின்தடை ஏற்பட்டு ஜெனரேட்டரும் வேலை செய்யாததால் பிரசவத்துக்கு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவல சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆண் குழந்தை பிறந்த பின்னர் உடல் நலக்குறைவினால் அந்த பெண் உயிரிழந்துள்ளதால் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
உயிரிழந்த அந்த இளம் தாயின் பெயர் வான்மதி என்பதாகும். கோவை மாவட்டம் அன்னூரை அடுத்த ஊத்துப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவரின் மனைவியாவார்.
விக்னேஸ்வரன் தனியார் பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவி வான்மதியை கடந்த 9ஆம் தேதியன்று அன்னூர் அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக அழைத்து வந்தார்.

அறுவை சிகிச்சை
கடந்த 21ஆம் தேதியன்று வான்மதிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்ட நிலையில், மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டது. உரிய நேரத்தில் ஜெனரேட்டர் வேலை செய்யாததால் வான்மதிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இயலாத நிலை உருவானது. திடீரென வான்மதிக்கு வலிப்பு ஏற்பட்டது.

ஆண் குழந்தை பிரசவம்
இதையடுத்து விக்னேஸ்வரன் தனது மனைவியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்தார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் வான்மதியின் உடல்நிலை மோசமானது. குழந்தை மற்றும் தாயை மேல் சிகிச்சைக்காக கோவில்பாளையம் அருகே தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் வான்மதியின் உடல்நிலை மோசமாகி இன்று காலை உயிரிழந்தார்.

உறவினர்கள் குற்றச்சாட்டு
வான்மதி உயிரிழந்த தகவல் அறிந்த உடன் தனியார் மருத்துவமனையின் முன்பு உறவினர்கள் குவிந்தனர். அரசு மருத்துவமனை மீதும் தனியார் மருத்துவமனை மீதும் அவர்கள் குற்றம் சாட்டினர். அரசு மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டு ஜெனரேட்டர் இயங்காததால் வான்மதிக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் தனியார் மருத்துவமனையில் சரியான முறையில் சிகிச்சை அளிக்காததால் இறந்துள்ளார். மருத்துவமனையின் மீதும் மருத்துவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நடவடிக்கை பாயுமா?
கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுராந்தகம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் வீடியோ காலில் பேசி செவிலியர்கள் பிரசவம் பார்த்தபோது குழந்தை உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, செவிலியர்கள், மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மின்தடை ஏற்பட்டது ஜெனரேட்டரும் வேலை செய்யாமல் கர்ப்பிணி பெண் அலைக்கப்பட்டு அவரது உயிரையே பறித்துள்ளது. அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications