சசிகலாவின் உறவினர், "கொங்கு மண்டல அதிமுகவின் பவர் சென்டர்" ராவணன் மாரடைப்பால் மரணம்
கோவை: கொங்கு மண்டலத்தின் பவர் பாயிண்ட்டாக இருந்தவரும் சசிகலாவின் உறவினருமான ராவணன் நேற்று மாரடைப்பால் காலமானார்.
அதிமுகவில் சசிகலா குடும்பத்தினர் ஒவ்வொரு மண்டலத்தில் கோலோச்சி இருந்தார்கள். அந்த வகையில் சசிகலாவின் உறவினரின் கட்டுப்பாட்டில் கொங்கு அதிமுக இருந்தது என சொல்லலாம்.
கொங்கு மண்டலத்தில் ராவணனின் கண் அசைவின்றி எதுவும் நடக்காது. கொங்கு முதல் கொடநாடு வரை முடிவு எடுக்கும் அதிகாரம் படைத்தவர் ராவணன் என சொல்லலாம். இவர் சசிகலாவின் சித்தப்பா கருணாகரனின் மருமகனாவார்.
நானும் அதிமுகவுக்கு தலைமை தாங்கலாம்.. பற்ற வைத்த காமராஜ்.. 'சோழ மண்டல தளபதி’ - சீண்டிய ஆதரவாளர்கள்!
கோவை தொழில் நிறுவனம்
இவர் கோவையில் தொழில் நிறுவனத்தை நடத்தி வந்தார். கொங்குவில் முக்கிய முடிவுகள் இவரது ஆலோசனையின் பேரில்தான் நடக்கும். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோரை வளர்த்தெடுக்க காரணமாக இருந்தவர் ராவணன் என்கிறார்கள். கொங்கு மண்டலத்தில் ராவணன் மூலமாக போயஸ் கார்டனுக்கு பலர் நெருக்கமானார்கள்.
கொங்கு மண்டலம்
ஒரு காலத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய கொங்கு மண்டல அதிமுக மாவட்டச் செயலாளர்கள் தேர்வு, தேர்தலுக்கான வேட்பாளர்களின் தேர்வு என அனைத்தும் ராவணன் தலைமையில் நடந்தது. கொங்கு மண்டலத்தில் கவுன்சிலர் பதவி முதல் எம்பி பதவி வரை யாருக்கு என்பதை நிர்ணயித்தவரும் இவரே.
முக்கியமானவர்
இப்படிப்பட்ட முக்கியமானவராக வலம் வந்த ராவணன் உள்பட சசிகலாவின் உறவினர்களை கடந்த 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா கட்சியை விட்டு நீக்கினார். 2011 ஆம் ஆண்டு ராவணன் மீது நில அபகரிப்பு, கொலை முயற்சி உள்ளிட்ட புகாரால் ராவணன் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அரசியலை விட்டு ஒதுங்கியிருந்த நிலையில் ராவணன் மீண்டும் அதிமுகவில் நுழைந்தார். ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு மீண்டும் கோவை பகுதியில் கரை வேட்டிக் கட்டிக் கொண்டு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். சசிகலா பொதுச் செயலாளர் ஆனவுடன் மீண்டும் கொங்கு மண்டலத்தில் ராவணனின் கை ஓங்கியது.
ராவணன் மரணம்
எடப்பாடி பழனிசாமி முதல்வராகி அவர் தினகரனுடன் முரண்பட்டதில் இருந்து ராவணன் மீண்டும் ஒதுங்க ஆரம்பித்தார். இந்த நிலையில் திருச்சியில் தனது மகனுடன் இருந்த ராவணனுக்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அவர் சொந்த கிராமத்தில் இன்று ராவணன் உடல் நல்லடக்கம் நடைபெறவுள்ளது.