பஸ்ல இடிக்கிறதும் ஆசிரியரின் பாலியல் சீண்டலும் ஒன்றா?.. பள்ளிக்கு வந்துட்டா அவ உங்க பொண்ணும்மா!
கோவை: தமிழகத்தில் பள்ளிகளில் நடைபெற்று வரும் பாலியல் சீண்டல்களில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மன உளைச்சல் ஏற்பட்டு மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு சென்றுவிடுகிறார்கள். சற்று தைரியமாக இருக்கும் மாணவிகள்தான் இதிலிருந்து மீண்டு காவல் நிலையத்தில் நியாயம் கேட்டு போராடுகிறார்கள்.
வீட்டில் பெற்றோர்கள், பாதுகாவலர்களுடன் இருப்பதை காட்டிலும் மாணவிகள் பள்ளிகளில்தான் அதிக நேரம் இருக்கிறார்கள். பெற்றோர்களும் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிய தைரியத்தில் நிம்மதியாக தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
மாதா, பிதா, குரு, தெய்வம் என வரிசைப்படுத்தியுள்ளார்கள் நம் முன்னோர்கள். இதில் தாய், தந்தைக்கு அடுத்த இடத்தில் கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியருக்குத்தான் முன்னுரிமை. நம்மை படைத்த கடவுளுக்குக் கூட கடைசி இடம்தான் தந்துள்ளோம். அப்படியிருக்கும் போது வேலியே பயிரை மேய்வது போல் பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் சீண்டல்கள் ஆசிரியர்களாலும், பள்ளி முதல்வர்களாலும், பள்ளி நிறுவனர்களாலும் ஏற்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.
இப்படியிருந்தால் கட்சி எப்படி உருப்படும்; சொல்லுங்க தலைவரே; ஸ்டாலினிடம் குமுறும் திமுக நிர்வாகி!
பொத்தாம் பொதுவாக...
எல்லா பள்ளிகளையும் பொத்தாம் பொதுவாக சொல்லிவிட முடியாது. தற்போது வரை பத்ம சேஷாத்ரி, மகரிஷி வித்யா மந்திர், சுஷில் ஹரி சர்வதேச பள்ளி, தற்போது கோவையில் உள்ள சின்மயா பள்ளி.... இப்படி இந்த பள்ளிகளில் ஆசிரியர்கள், பள்ளி நிறுவனர்கள் மாணவிகளிடம் அவர்களது ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு பாலியல் சீண்டலில் ஈடுபடுவதும் அதை வெளியே சொன்னால் தனது பெற்றோருக்கு அவமானம் ஏற்படும் என சொல்ல அஞ்சி தங்கள் மனதில் போட்டு புதைத்துக் கொள்வதும், உயிரை மாய்த்து கொள்வதும் நடந்துக் கொண்டுதான் இருக்கின்றன.
எல்லா மாணவிகளும்
இது போன்ற வக்கிர புத்தியுள்ள ஆசிரியர்களும் எல்லா மாணவிகளிடமும் இது போல் தங்கள் கீழ்த்தரமான புத்தியை காட்டுவதில்லை. எந்த மாணவி வெளியே சொல்ல மாட்டாரோ, யாருடைய பேக்கிரவுண்ட் மிகவும் புவராக இருக்கிறதோ அவர்கள்தான் இவர்களது டார்க்கெட்டாக இருக்கிறது. இதற்காக அந்த மாணவிகளுக்கு முதலில் போனில் சாட்டிங் அனுப்பி ஆழம் பார்த்த பின்னரே இது போல் இவர்கள் அடுத்த கட்ட ஆக்ஷனில் இறங்கிவிடுகிறார்கள்.
ஆழம்பார்க்கும் ஆசிரியர்கள்
பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனோ இது போல் ஆழம் பார்க்கும் போது மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்தால் உடனே "சாரி ராங்கிலி சென்ட்" என போட்டு தப்பும் வழக்கத்தையும் வைத்திருந்துள்ளார். இது போல் இந்த காமக் கொடூரன்களின் உண்மையான நிறத்தை உரிக்க நினைத்து மாணவிகள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தால் அது குறித்து நடவடிக்கை எடுக்காமல் மாணவியை சமாதானம் செய்யும் போக்கு அதிகரித்துள்ளது.
பள்ளிகள்
காரணம் மேற்கண்ட பாலியல் புகாரில் சிக்கிய பள்ளிகள் அனைத்து தனியார் பள்ளிகள்... இங்கு தங்கள் குழந்தைக்கு அட்மிஷன் கிடைக்க பெற்றோர் பல இரவுகள் பள்ளிகளின் வாசலில் தங்கியிருந்து காலையில் விண்ணப்பத்தை வாங்கி செல்லும் அளவுக்கு பிரபலமான பள்ளிகள். இவர்களது அகெடெமிக்கில் குறையே சொல்ல முடியாத அளவுக்கு கற்பித்தல் இருக்கும். ஆனால் எத்தனை திறமை இருந்தாலும் ஒழுக்கம் என இல்லாவிட்டால் டாப் ரேங்கில் இருந்து என்ன பயன்?
நடவடிக்கை
மகிரிஷி வித்யா மந்திர் பள்ளியில் ஆசிரியர் ஆனந்த் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை அடுத்து பள்ளி நிர்வாகம் அவரை சஸ்பெண்ட் செய்துவிட்டதாக கூறுகிறது. ஆனால் இந்த நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட்டதா, இல்லை நீண்ட கால இழுபறிக்கு பிறகு நடந்ததா என தெரியவில்லை. அது போல் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியில் நிறுவனர் சிவசங்கர் பாபா கிட்டதட்ட மாணவிகளிடம் தன்னை கடவுள் போல் காட்டிக் கொண்டு பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார்.
தற்கொலை செய்த மாணவி
பத்ம சேஷாத்ரி, சின்மயா வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர்கள் ராஜகோபாலன், மிதுன் சக்கரவர்த்தி குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது. சின்மயா பள்ளியில் முதல்வர் மீரா ஜாக்சனிடம் தற்கொலை செய்து கொண்ட கோவை மாணவி , ஆசிரியர் மிதுன் மீது புகார் கூறிய போது பேருந்தில் யாராவது இடித்துவிட்டால் கடந்து போவதில்லையா, அது போல் ஆசிரியர் செய்ததை கடந்து போ என சொல்லி குற்றத்திற்கு அவரும் துணையாக இருந்துள்ளதை அப்பட்டமாக காட்டுகிறது.
பள்ளியில் பாலியல் சீண்டல்
பேருந்தில் யாரோ பெண் பிள்ளையை இடிப்பதும், ஒரு ஆசிரியர் மாணவியை தனியே அழைத்து மோசமான பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவதும் ஒன்றா? ஒரு பெண்ணாக இருந்து கொண்டு எப்படி இந்த பாலியல் அத்துமீறலை கடந்து போக மீரா சொன்னார் என்பது தெரியவில்லை. குறைந்தபட்சம் அந்த ஆசிரியரை அழைத்து விசாரித்திருக்க வேண்டாமா? என்னதான் ஆசிரியர்கள் தங்க ஊசியாகவே இருந்தாலும் பள்ளி வளர்ச்சி என்பதற்காக தங்க ஊசியை கண்களில் குத்தி கொள்ள முடியுமா என்ன?
பள்ளிக்கு நற்பெயர்
பள்ளியின் மாணவர் சேர்க்கை, பள்ளியின் நற்பெயர், வருமானம் உள்ளிட்டவற்றை காட்டிலும் உயிர் விலை மதிக்க முடியாதது என்பதை இவர்கள் மறந்தது ஏனோ? டீக்கடையில் வேலை பார்த்தவரின் மகள் என்பதற்காக அந்த மாணவிக்கு நீதி மறுக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம்? மானம், அவமானம், மன உளைச்சல் எல்லாம் ஏழைகளுக்கு ஒரு மாதிரியும் பணக்காரர்களுக்கு ஒரு மாதிரியுமா இருக்கும்? ஒரு மாணவி வீட்டில் பெற்றோருடன் இருப்பதை காட்டிலும் பள்ளி, சிறப்பு வகுப்பு, டியூஷன், எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ் என சுற்றி சுற்றி பள்ளி, ஆசிரியர்களுடன்தான் இருக்கிறார். பள்ளியில் சேர்க்கும் போது பெற்றோரிடம் இந்த பள்ளி நிர்வாகம் கூறுவது என்ன?.. "கவலைப்படாதீங்க.. எங்க பள்ளியில் சேர்த்துட்டீங்கல்ல, இனி அவ எங்க பொண்ணு, எங்க குழந்தை" என்கிறார்கள். ஆனால் அதை மீரா ஜாக்சன் போன்ற பள்ளி முதல்வர்கள் காப்பாற்ற தவறுவது ஏன்? வீட்டிலிருந்து பள்ளிக்கு வந்த கோவை மாணவியும் உங்கள் பொண்ணுதானேம்மா...!