அப்படியே ஆடிப்போன மாணவர்கள்.. பள்ளி வளாகத்தில் பிணமாக தொங்கிய தொழிலாளி.. என்ன காரணம்?
கோவை: கோவையில் அரசு பள்ளி வளாகத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை மாவட்டம் சூலூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம்போல் மாணவர்களும், ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை புரிந்தனர்.

பள்ளி வளாகம்
அப்போது பள்ளி வளாகத்தில் உள்ள ஜன்னல் கம்பியில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்து மாணவர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். இது குறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையிலான போலீசார் உடனடியாக பள்ளிக்கு விரைந்து வந்தனர். வாலிபரின் உடலை மீட்டு தீவிர விசாரணை நடத்தினார்கள்.

தேனி மாவட்டம்
போலீஸ் விசாரணையில் பள்ளி வளாகத்தில் பிணமாக தொங்கிய நபர் தேனி மாவட்டம் உஞ்சம்பட்டியை சேர்ந்த ரமேஷ்(45) என்பது தெரியவந்தது. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனியை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் ஒருவரிடம் வேலை கேட்டுள்ளார். அதற்கு அவர் ஒருவாரம் கழித்து கூப்பிடுகிறேன் வா என்று கூறியுள்ளார்.

சுவர் ஏறி குதித்து..
இதையடுத்து ரமேஷ் வீட்டிற்கு செல்லாமல் நேராக சூலூருக்கு வந்துள்ளார். பின்னர் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்த அவர் சூலூர் பள்ளியின் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஆனால் அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது தெரியவில்லை.

காரணம் என்ன?
இதையடுத்து போலீசார் ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரமேஷ் சூலூருக்கு ஏன் வந்தார்? அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? இல்லையெனில் எதேனும் தகராறு காரணமாக ரமேசை அடித்து கொலை செய்து விட்டு தூக்கில் தொங்க விட்டனரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சூலூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் சிலர் சுவர் ஏறி குதித்து பள்ளி வளாகத்தில் சுற்றி திரிவதாக கூறப்படுகிறது. இவர்கள் மீது போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications