'சீனா நெருங்கிய கூட்டாளி'.. 'இந்தியா எங்களின் சகோதர நாடு'.. இரண்டு பக்கமும் பேலன்ஸ் செய்யும் இலங்கை
கொழும்பு: சீனா தனது நெருங்கிய கூட்டாளி என்றும் இந்தியா எங்களின் சகோதர நாடு என்றும் இந்தியாவுக்கான இலங்கை தூதர் பேசியுள்ளார்.
இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்த அந்நாடு பல்வேறு உலக நாடுகளிடம் கடன் உதவி கேட்டு வருகிறது.
லடாக்: கோக்ரா – ஹாட்ஸ்பிரிங் எல்லையில் இந்தியா-சீனா படை வாபஸ் தொடக்கம்- தணியும் எல்லை பதற்றம்!
இலங்கைக்கு உதவும் இந்தியா
இந்தியாவின் அண்டை நாடுகளில் இலங்கையும் ஒன்று என்பதால் அந்நாட்டுக்கு இந்தியாவும் பல்வேறு வகையில் உதவிகளை வழங்கி வருகிறது. அந்த நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர இந்தியாவும் பல்வேறு வகைகளில் உதவி வருகிறது. குறிப்பாக உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா தான் இலங்கைக்கு அதிக கடன் உதவி வழங்கியுள்ளது. குறிப்பாக இந்த 2022-ஆம் ஆண்டில் மட்டும் இந்தியா இலங்கைக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கி உள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டில் இந்தியாவை விட இலங்கைக்கு சீனா அதிக கடன் வழங்கியிருந்தது.
சீனா எங்களது கூட்டாளி
இந்த நிலையில், 'சீனா தனது நெருங்கிய கூட்டாளி' என்றும் 'இந்தியா எங்களின் சகோதர நாடு' என்றும் இந்தியாவுக்கான இலங்கை தூதர் இரு நாடுகளையும் விட்டுக்கொடுக்காமல் பேசியுள்ளார். இது தொடர்பாக இந்தியாவுக்கான இலங்கை தூதர் மிலிண்டா மோரகோடா நிகச்சி ஒன்றில் பங்கேற்று பேசியதாவது:- சீனா மிக மிக நெருங்கிய நண்பர் என்றும் இந்தியா நமது சகோதரர் மற்றும் சகோதரி என்று ராஜபக்சே எப்போதும் செல்வார். குடும்பத்திற்குள் நீங்கள் வாய்ச்சண்டை போட்டுக்கொள்ளலாம். ஆனால் இறுதியில் அது உங்கள் குடும்பம்.
சீதாவும் சங்கமிதாவும்
ராமாயணம் முதல் புத்திசம் வரை இந்தியா - இலங்கை இடையே நீண்ட வரலாற்று தொடர்பு உண்டு. சீதாவும் சங்கமிதாவும் இரு நாடுகளுக்கும் இடையே பாலத்தை உருவாக்கியுள்ளனர். இந்தியா - இலங்கை இடையேயான உறவு மிகவும் சிறப்பு வாய்ந்தது. சில ஏற்ற இறக்கங்கள் இருக்கும். இந்தியா - இலங்கை உறவு சீரற்றதாக இருந்தாலும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்தியாவின் பாதுகாப்பு நலன்கள் எங்களின் பாதுகாப்பு நலன்களும் ஆகும்.
போர்க்கப்பல் குறித்து பேச்சு
இந்த மாத துவக்கத்தில் சீனாவின் யுவான் வாங் 5 என்ற போர்க்கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது குறித்து பேசிய இலங்கை தூதர், கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி ஒரு குழப்பமான சூழல் நிலவிய சமயத்தில் இதற்கான முடிவு உயர் அதிகாரிகளால் எடுக்கப்பட்டது. இந்தியாவின் பாதுகாப்பு நலன்கள் எங்களின் நலன்களும் கூட. எனவே இந்தியாவின் பாதுகாப்பை சிறுமைப்படுத்தும் நோக்கம் அதில் கிடையாது. இது தொடர்பாக அதிபர் அண்மையில் தெளிவாக விளக்கம் அளித்துவிட்டார்.