பெருவெள்ளத்தில் கரைந்துவிடுமா சிறு துளி? ஐஎம்எஃப் நிதி உதவி இலங்கையை காக்க முடியுமா?
கொழும்பு: இலங்கையில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்துடன் அந்நாடு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டிருக்கிறது. இதன் மூலம் 48 மாத காலத்திற்கு சுமார் 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ஏறத்தாழ ரூ.23 ஆயிரம் கோடி) நிதி இலங்கைக்கு கிடைக்கும்.
இந்த நிதி நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை குறைக்க உதவும் என சொல்லப்படுகிறது. ஆனால், இந்த நிதி இலங்கை அரசின் கைகளுக்கு கிடைப்பதற்கே சுமார் 6 மாத காலம் ஆகலாம் என்றும் சொல்லப்படுகிறது.
அப்பாடா! பெருமூச்சு விட்ட இலங்கை.. ரூ.23,000 கோடி கடன் வழங்க சர்வதேச நிதியம் ஒப்புதல்!
உணவு பாதுகாப்பு
ஏறத்தாழ இரண்டரை கோடி மக்கள் தொகை கொண்ட இலங்கையில் சமீப நாட்களாக அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. ஏற்கெனவே நாட்டின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ஷ நாட்டை விட்டு ஓடிவிட்ட நிலையில் தற்போது ரணில் விக்ரமசிங்க புதிய அதிபராக செயலாற்றி வருகிறார். ஆனாலும் இலங்கை இந்த பாதிப்புகளிலிருந்து முற்றிலுமாக மீளவில்லை. இலங்கையின் உலக உணவுத் திட்டத்தின் சமீபத்திய மதிப்பீட்டின்படி, ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சுமார் 30 சதவிகிதமானோர் உணவு பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணவீக்கம்
மேலும், ஒவ்வொரு நான்கு பேரில் ஒருவர் உண்பதற்கு வசதியாக உணவைத் தவிர்ப்பதாகவும் தெரியவந்துள்ளது. வேலையின்மை, வருவாய் இழப்பு, ஊதிய பற்றாக்குறை, பணவீக்கம், இவையெல்லாம் அந்நாட்டில் உள்ள மக்களையும் உள்நாட்டு போரின்போது அகதிகளாக சென்று மீண்டும் நாடு திரும்பியவர்களையும் கடுமையாக பாதித்திருக்கிறது. மேற்குறிப்பிட்ட பிரச்னைகள் நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பாதி பேரை வறுமை கோட்டிற்கு கீழே கொண்டு சென்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரான இந்திரஜித் குமாரசுவாமி ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
மின் கட்டண உயர்வு
தற்போது இந்த கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் நிலைமைகள் மோசமடைந்துள்ளன. இந்திரஜித் இந்த கூற்றை கடந்த ஜூலையில் கூறியிருந்தார். அப்போது நாட்டின் பணவீக்கம் பணவீக்கம் 66.7 சதவீதமாக இருந்தது. அதே நேரத்தில் தேசிய உணவுப் பணவீக்கம் 82.5 சதவீதமாக இருந்தது. அரசுக்குச் சொந்தமான இலங்கை மின்சார சபை கடுமையான கடனில் இருந்ததாலும், தொடர்ந்து இந்த கடனிலும் மின்சாரம் தயாரித்ததாலும் இதனை ஈடுகட்ட மின் கட்டண உயர்வை அமல்படுத்தியது. அரசும் இதனை அங்கீகரித்தது.
தண்ணீர் கட்டணம் உயர்வு
இதுபோன்று எரிபொருள், தண்ணீர் என எல்லாவற்றின் விலையும் தொடர்ந்து அதிகரித்த நிலையில் நெருக்கடியிலிருந்து மக்களை மீட்க சில தொண்டு நிறுவனங்களும் உருவாகின. ஆனால் தொண்டு நிறுவனங்கள் நடத்துபவர்கள் உலகம் முழுவதும் இருந்து நிதி பெற்றாலும் அவர்களால் உணவு விநியோகத்தை தொடர முடியவில்லை என்று கூறியுள்ளனர். மேலும், அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்துள்ளதால் சத்துள்ள உணவு விநியோகத்திற்கான சாத்தியம் தொடர்ந்து குறைந்து வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
வருமானம் இழப்பு
மாணவர்களின் உணவுக்கான நிதி ஒதுக்கீட்டை அந்நாட்டு அரசு இரு மடங்காக உயர்த்தி இருந்தாலும், அது போதுமானதாக இருக்கவில்லை என பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். இது ஒருபுறம் எனில் மறுபுறத்தில் எரிபொருள் விலை விண்ணை தொட்டுள்ளது. பொதுவாக வாரத்திற்கு தோராயமாக 82 அமெரிக்க டாலர் (ரூ.6,533) வரை வருமானம் ஈட்டும் வண்டி ஓட்டுநர் இந்த விலையுயர்வு காரணமாக வெறும் 14 அமெரிக்க டாலர் மட்டுமே வருமானம் ஈட்டுவதாக கூறியுள்ளார். இந்திய மதிப்பில் இது வெறும் ரூ.1,115 மட்டுமே.
வேளாண் தொழில்
இலங்கையின் அந்நிய செலாவணியை கட்டுப்படுத்தும் முயற்சியாக, பால் பொருட்கள் மற்றும் மின்னணு சர்வர் உபகரணங்கள் உட்பட 300 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் காலவரையின்றி தடை விதித்தது. இது எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என இன்னும் தெரியவில்லை. உணவு பொருட்களை பொறுத்த அளவில் கோழி முட்டை விவசாயம் பிரதானமாக இருந்து வந்த நிலையில் அரசு அதற்கும் விலையை நிர்ணயித்தது. இலங்கை ரூபாய் மதிப்பில் ஒரு முட்டையை உற்பத்தி செய்ய தோராயமாக 50 ரூபாய் ஆகும் நிலையில் அரசு 1 முட்டைக்கு 43 ரூபாயை நிர்ணயித்துள்ளது. இதனால் விவசாயிகள் திணறி வருகின்றனர்.
கால்நடை வளர்ப்பு
தீவன செலவுகளும் அதிகரித்துவிட்டதால் கால்நடைகளுக்கு தீவனம் வாங்குவதில் பெரும் சிக்கல் மேலெழுந்துள்ளது. உள்நாட்டில் பரவலாக கிடைக்கும் சோளம் கூட தற்போது கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். கோழி பண்ணை வைத்துள்ளவர்கள் அதனை தொடர்ந்து நடத்த முடியாமல் அதை மூடி வருகின்றனர். இதற்கிடையில் சர்வதேச நாணய நிதியத்திலிருந்து உதவியை பெற இலங்கை அரசு தொடர்ந்து முயன்று வந்திருந்தது.
பேச்சு வார்த்தையில் முன்னேற்றம்
தற்போது இலங்கைக்கு கடன் கொடுப்பதற்கு ஊழியர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல இலங்கை தனது நிரந்தர நிதி மற்றும் நடப்புக் கணக்கு பற்றாக்குறையை சரிசெய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய பொருளாதார சீர்திருத்தங்களையும் நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது. வரி வருவாயை உயர்த்துதல், எரிசக்தி விலைகளை உயர்த்துதல், அதனால் செலவுகளை ஈடுகட்டுதல், சமூக பாதுகாப்பு வலைகளை விரிவுபடுத்துதல் மற்றும் மத்திய வங்கி மற்றும் நாணயக் கொள்கை ஆணையத்தின் சுதந்திரத்தை மீட்டெடுத்தல் ஆகியவை நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளதில் முக்கியமானதாகும்.
எதிர்காலம்
இவ்வளவு நிபந்தனைகளுடன் வழங்கப்படும் கடன் உடனடியாக கிடைத்துவிடாது. எப்படியாயினும் இது இலங்கை அரசின் கைகளில் கிடைப்பதற்கு 4-6 மாதங்கள் ஆகும் என சொல்லப்படுகிறது. இந்த தொகையானது இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் சிறுதுளிதான் என்றாலும் அதனை வைத்து தொடர்ந்து முன்னேறுவது அரசின் கடமையாகும். இலங்கைக்கு வெளிநாட்டு கடன் தற்போது 51 பில்லியன் டாலர் இருக்கிறது. இதில், 28 பில்லியன் டாலரை வரும் 2027 ஆம் ஆண்டில் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் அந்நாடு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.