இன்று முதல் திங்கள்கிழமை காலை வரை இலங்கையில் ஊரடங்கு உத்தரவு.. மக்கள் வெளியே வர முடியாது
கொழும்பு: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இலங்கை நாடு முழுக்க இன்று மாலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் தோன்றிய, கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளுக்கும் பரவி வருகிறது. இதில் குட்டித் தீவான இலங்கையும் தப்பவில்லை. இலங்கையில் இதுவரை 59 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். 204 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 2500 பேர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மக்கள் தங்களை தாங்களே, தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டாலும், அதற்கு போதிய பலன் கிடைத்தபாடில்லை. இந்த நிலையில்தான், இன்று மாலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை இலங்கை முழுவதுமே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அந்த நாட்டு அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலும் அந்த நாட்டில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் இந்த இரு நாட்களுக்கும் தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால், கடைகளில் இன்று காலை முதல் கூட்டம் அலைமோதி வருகிறது.