இலங்கையில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிய தடை- அமைச்சரவை ஒப்புதல்- பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாம்!
கொழும்பு: இலங்கையில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைக்கும் பர்தா (புர்கா) உள்ளிட்ட ஆடைகளை அணிய தடை விதிக்க அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. முகத்தை மறைக்கும் பர்தா ஆடை அணிவது இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என இந்த தடைக்கு காரணமாக கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் 2019-ம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று ஐ.எஸ். பயங்கரவாதிகள் தேவாலயங்களின் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களில் 260க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
ஆக்சிஜனுக்காக தவிக்கும் இந்தியா.. உருகிய பிரெட் லீ.. 1 பிட்காயின் நன்கொடை தருவதாக அறிவிப்பு
மதராசாக்கள் மூடல்
இதையடுத்து இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தன. இதன் ஒருபகுதியாக இலங்கையின் தேசிய கல்வி கொள்கையை பின்பற்றவில்லை என மதராசாக்களை மூட உத்தரவிடப்பட்டது.
பர்தா தடைக்கு முடிவு
இதேப்போல் இலங்கையில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைக்கும் பர்தா (புர்கா) ஆடை அணியவும் தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்தது. இந்த முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி அமைச்சரவைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
பர்தா தடைக்கு அமைச்சரவை ஒப்புதல்
பொது பாதுகாப்புத் துறை அமைச்சர் சரத் வீரசேகராவின் இந்த யோசனையை ஏற்று இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு பர்தா அணிவது அச்சுறுத்தலாக இருக்கிறதாம். இதனால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாம்.
கொரோனா முக கவசம்- பர்தா
இலங்கை உட்பட உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா பரவல் கோரத்தாண்டவமாடி வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்க பொதுமக்கள் கையில் எடுக்க வேண்டிய முக்கிய ஆயுதமே முக கவசம் அணிவது என்பதுதான். முஸ்லிம் பெண்கள் இயல்பாகவே பர்தா ஆடையை முகத்தை மறைக்கும் வகையில்தான் அணிந்து வருகின்றனர். ஒருபக்கம் முக கவசம் அணியுங்கள் என கூறிக் கொண்டு இன்னொரு பக்கம் முகத்தை மறைக்கும் பர்தா ஆடைக்கு இலங்கை அரசு தடை விதித்திருப்பது கடும் விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறது.