இந்தியாவிற்குதான் நன்றி சொல்லணும்.. ரொம்ப உதவி பண்றாங்க! ஆனால்.. இலங்கை முன்னாள் பிரதமர் கலக்கம்!
கொழும்பு: ‛‛இலங்கைக்கு இந்தியா அதிக உதவி செய்து வருகிறது. இந்தியா வழங்கிய எரிபொருட்கள் மே 2வது வாரத்தில் தீர்ந்து விடும். அதன்பிறகு இலங்கையின் நிலைமை இன்னும் மோசமாகும்'' என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.
இலங்கை மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ள நிலையில் மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.
அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. எதிர்க்கட்சிகள் விரைவில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியதாவது:

திறமையில்லாத ராஜபக்சே
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தற்போதைய அரசே காரணம். பொருளாதார கொள்கைகளையும், நிதி ஆதாரங்களையும் கவனிக்க தவறிவிட்டனர். திறமையில்லாத இந்த அரசால் தான் தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எங்களது ஆட்சியில் இதுபோன்ற மோசமான நிலை வரவில்லை. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க எங்கேயும் நிற்கவில்லை. போராட்டங்கள் நடக்கவில்லை. ஆனால் தற்போது இது அனைத்தும் திறமையில்லாத கோத்தபய ராஜபக்சே ஆட்சியில் நடக்கிறது.

எதுவுமில்லாத அரசு
நாட்டில் நிலவும் அரசியல் பிரச்சனைகளுக்கு பொருளாதார நெருக்கடியே காரணமாகும். கடந்த 2 ஆண்டுகளாக பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் இந்த அரசு விட்டுவிட்டது. 2019ல் நாங்கள் வெளியே வந்தபோது உபரியாக நிதி இருந்தது. கடன் செலுத்தவும் பணம் இருந்தது. தற்போது இலங்கை அரசிடம் எதுவும் இருப்பதாக தோன்றவில்லை. ஏனென்றால் முன்னணி ஏற்றுமதி நிறுவனங்களிடம் கடன் வாங்கி தான் அவர்கள் பயன்படுத்துகின்றனர்.

அதிக உதவி செய்யும் இந்தியா
இந்தியா வழங்கிய எரிபொருட்களும் மே 2வது வாரத்தில் தீர்ந்து விடும். இதையடுத்து இன்னும் கடும் நெருக்கடி ஏற்படும். இலங்கைக்கு இந்தியா அதிக உதவிகளை செய்து வருகிறது. நிதி தவிர்த்து பிற வழிகளில் அனைத்து வித உதவிகளையும் இந்தியா செய்து வருகிறது. இதனால் இந்தியாவுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

சர்வதேச நாணய நிதியம்
மத்திய வங்கி கூறியபோதே இலங்கை அரசு சர்வதேச நாணய நிதியத்தை(ஐஎம்எப்) அணுகவில்லை. இதனால் தான் மக்கள் தற்போது பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது நாள்தோறும் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது. ஐஎம்எப் உதவிக்கு இன்னும் காலம் எடுக்கும். உண்மையில் இலங்கையில் நிலவும் பிரச்சனைக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அதிகளவில் இளைஞர்கள் வாக்களித்தனர். தற்போது அவர்களே களத்தில் குதித்து போராட்டம் நடத்துகின்றனர். கோத்தபய ராஜபக்சேவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சீனாவுடன் பேச்சுவார்த்தை
இந்த அரசின் கீழ் சீன முதலீடுகள் அதிகமாக இருப்பதாக தெரியவில்லை. அவர்கள் சீன முதலீடுகளை நாடியதாகவும், முதலீடுகள் கிடைக்கவில்லை எனவும் நினைக்கிறேன். இருப்பினும் கடன்களை திரும்ப செலுத்துவது தொடர்பாக தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications