கச்சத்தீவை இந்தியாவுக்கு கொடுக்கப் போகிறதா இலங்கை? உச்சமுனி தீவை சுவிஸுக்கு தந்ததால் பரபரப்பு!
கொழும்பு: இலங்கை தமக்கு சொந்தமான உச்ச முனி தீவை சுவிட்சர்லாந்துக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளது. இதனையடுத்து இந்தியாவுடனான சர்ச்சைக்கு காரணமான கச்சத்தீவை இந்தியாவிடமே இலங்கை கொடுக்குமா? அல்லது நீண்டகால குத்தகைக்கு தருமா? என்கிற எதிர்பார்ப்பும் விவாதமும் எழுந்துள்ளது.
இலங்கையில் அரசியல் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. ஒரு பக்கம் போராட்டம்.. இன்னொரு பக்கம்.. மாஜி பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகள், வாகனங்கள், வர்த்தக நிறுவனங்கள் தீக்கிரை என பற்றி எரிகிறது இலங்கை. இலங்கையைவிட்டு ராஜபக்சேவும் அவரது கூட்டாளி மாஜி அமைச்சர்களும் தப்பி ஓடிவிடக் கூடாது என நீதிமன்றமும் தடை விதித்துள்ளது.
ஆபரேஷன் கச்சத்தீவு.. "கண்" வைத்த டெல்லி.. அண்ணாமலையின் இலங்கை ட்ரிப்பிற்கு இதுதான் காரணமா? உண்மையா?
பிரதமராகும் ரணில்
இந்த நிலையில் இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே இன்று பதவியேற்கிறார். ரணிலைத் தொடர்ந்து ஓரிரு நாட்களில் ரணிலின் அமைச்சரவை பதவியேற்க உள்ளது. சர்வதேச நாடுகளின் நெருக்கடியை தணிக்கவே ரணில் விக்கிரமசிங்கே பிரதமராகிறார்.
இலங்கையின் உச்சமுனி தீவு
இதனிடையே இலங்கையில் உள்ள முக்கிய தீவுகளில் ஒன்றான உச்சமுனி தீவை சுவிஸ் நிறுவனம் ஒன்று குத்தகைக்கு எடுத்துள்ளது என்று சிங்கள ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக அந்த ஊடகத்தில் இடம்பெற்றுள்ள செய்தி: நாட்டில் அவசரகாலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 1,500 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 200 மீனவ குடும்பங்கள் வசிக்கும் கற்பிட்டி தீவுக்கூட்டத்தின் 2-வது பெரிய தீவான உச்சமுனி தீவு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. சுவிஸ் நிறுவனம் ஒன்றுக்கு 417 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் சுற்றுலாத்துறை அமைச்சகத்தால் கையெழுத்திடப்பட்டது.
உச்சமுனி தீவு சர்ச்சை
அதேநேரத்தில் இந்த தீவு 2022 ஆம் ஆண்டு மதிப்பிடப்பட்ட தொகைக்கு ரூ.10,00,000-க்கு எவ்வாறு குத்தகைக்கு விடப்பட்டது என்று இலங்கை சுற்றுலா வழிகாட்டிகள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. அத்துடன் உச்சமுனி தீவு எந்த கட்டுமானத்திற்காக குத்தகைக்கு விடப்பட்டது என்பது தெளிவாக இல்லை, இத் தீவின் பல்லுயிர் பெருக்கத்தில் எந்தவொரு கட்டுமானமும் செய்யப்படுவதற்கு முன்னர் தேவையான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு சான்றிதழைப் பெறவில்லை என்று இலங்கை சுற்றுலா வழிகாட்டிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
Recommended Video
கச்சத்தீவு கிடைக்குமா?
ஏற்கனவே இந்தியாவால் இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என்பது தமிழ்நாட்டு மக்களின் நீண்டகால கோரிக்கை. தற்போதைய சூழ்நிலையில் இலங்கைக்கு இந்தியா ஏராளமான கடனுதவி வழங்கி வருகிறது. இதனால் கச்சத்தீவை நீண்டகால குத்தகைக்கு இந்தியா திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த பின்னணியில் சுவிஸ்க்கு உச்சமுனி தீவை கொடுத்தது போல இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை இந்தியா திரும்பப் பெறலாம் என்கிற யோசனையும் முன்வைக்கப்படுகிறது.