இலங்கையை திரும்பி பார்க்க வைத்த தமிழ் மாணவி.. கொழும்பு பல்கலையில் 13 தங்க பதக்கங்களை வென்று சாதனை!
கொழும்பு: இலங்கையின் கொழும்பு பல்கலைக்கழத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழ் பெண் ஒருவர் 13 தங்க பதக்கங்களை தட்டி சென்று இருக்கிறார்.
இலங்கையின் நம்பர் 1 பல்கலைக்கழகம் கொழும்பு பல்கலைக்கழகம் ஆகும். மிகவும் பழமையான பல்கலைக்கழகம் ஆகும் இது. கணினி தொடங்கி மருத்துவம், சட்டம் வரை பல்வேறு படிப்புகள் இங்கு வழங்கப்படுகிறது.
இதில் மருத்துவ பிரிவில் பட்டம் முடித்தவர்களுக்கு நேற்று பதக்கங்கள் வழங்கப்பட்டது. மொத்த மதிப்பெண், பயிற்சி தொடங்கி பல்வேறு பிரிவுகளில் இந்த பதக்கங்கள் வழங்கப்படும்.
நடுங்குகிறது தலைநகர்.. வாட்டுகிறது குளிர்.. தவிக்கும் உத்தரபிரதேசம்.. 15 நாட்கள் பள்ளிகள் விடுமுறை
எத்தனை பதக்கங்கள்
இதில் மொத்தம் 37 பதக்கங்கள் வழங்கப்படும். இந்த 37 பதக்கங்களில் மொத்தம் 13 பதக்கங்களை தமிழ் பெண் தர்ஷிகா தணிகாசலம் வென்று பெரிய சாதனை படைத்துள்ளார். இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் வாழும் பகுதியான அக்கரைப்பற்று பிரதேசத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் தர்ஷிகா தணிகாசலம்.
ஒரு தங்கம்
இந்த பல்கலையில் மருத்துவ பிரிவில் ஒரு தங்கம் வாங்குவதே மிகவும் கடினமான விஷயம் ஆகும். ஆனால் கிராமத்தில் இருந்து வந்து தர்ஷிகா தணிகாசலம் 13 பதக்கங்களை பெற்றுள்ளார். அதிக பணக்காரர்கள், வசதியான பின்னணியை கொண்ட சிங்களர்கள் இங்கு அதிகம் படிக்க கூடியவர்கள். அவர்களுக்கு இடையில் தர்ஷிகா தணிகாசலம் இந்த சாதனையை படைத்தார்.
தர்ஷிகா தணிகாசலம் சாதனை
இதில் கவனிக்க வேண்டிய விஷயம், தர்ஷிகா தணிகாசலம் சிங்களம் தெரியாமல் வளர்ந்தவர். இந்த பல்கலையில் படிக்கும் முனைவு வரை தர்ஷிகா தணிகாசலத்திற்கு பெரிய அளவில் சிங்களம் சரளமாக பேச தெரியாது. இருப்பினும்.. பல சிக்கல்கள், போட்டிகளுக்கு இடையில் தர்ஷிகா தணிகாசலம் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
பேட்டி
இது தொடர்பாக பிபிசி ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ள அவர், சிங்களம் தெரியாமல் கஷ்டப்பட்டேன். 5 ஆண்டுகளும் நான்தான் முதல்நிலை மாணவி. ஒவ்வொரு துறையில் சிறப்பாக உள்ளவர்களுக்கு பதக்கம் தருவார்கள். சிறந்த மாணவி, இறுதி தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவி, சர்ஜரி, மன நோய் பிரிவு, குழந்தைகள் பிரிவு, மருந்துகள் பிரிவு என்று பல்வேறு பிரிவுகளில் எனக்கு விருது கிடைத்தது.
நன்றி
5 வருடமும் சிறப்பாக செயல்பட்டதால் இந்த விருது அளிக்கப்பட்டது. நான் இதை எதிர்பார்க்கவில்லை. நான் 1 பதக்கம் வந்தாலும் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் 13 பதக்கம் கிடைத்துள்ளது என்று தர்ஷிகா தணிகாசலம் கூறியுள்ளார். தமிழ் மாணவி ஒருவர் சோதனைகளை கடந்து 13 பதக்கத்தை இலங்கையின் முன்னணி பல்கலையில் வென்றது இலங்கை முழுக்க பெரிய அளவில் வைரலாகி உள்ளது.