3 முறை அமைச்சர் பதவி கிடைத்தும் மறுத்துவிட்டேன்.. ஏன் தெரியுமா.. எச்.எம்.எம்.ஹாரீஸ் புது தகவல்
3 முறை அமைச்சர் பதவி கிடைத்தும் மறுத்துவிட்டதாக ஹாரீஸ் தெரிவித்துள்ளார்
கொழும்பு: அமைச்சர் பொறுப்பை ஏற்குமாறு 3 தடவைகள் எனக்கு அழைப்புகள் வந்தும், அவைகளை நான் முற்றிலும் நிராகரித்து விட்டேன் என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹாரீஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.. அங்குள்ள அரசுக்கு எதிராக பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதனிடையே, பிரதமர் ராஜபக்சேவை தவிர்த்து 26 அமைச்சர்களும் சமீபத்தில் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்...
இலங்கை நெருக்கடி: கொழும்பு போராட்டத்தில் தமிழில் குரல் எழுப்பிப் போராடும் ஒற்றைப் பெண்
ராஜினாமா
எப்படி பாகிஸ்தானில் நடந்ததோ அதுபோலவே, இலங்கையிலும் அடுத்தடுத்த மாற்றங்கள் நடந்தன.. இலங்கை பார்லிமென்ட் மற்றும் அரசு விவகாரங்களை முன்நடத்தி செல்ல நிதியமைச்சர் உள்ளிட்ட 4 அமைச்சர் பதவிகளில் புதிய அமைச்சர்களை அதிபர் கோத்தபய ராஜபக்சே உடனடியாக நியமித்தார்... இதையடுத்து, கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்று கொண்டுள்ளது..
ஹாரீஸ் தகவல்
இந்த அமைச்சரவையில் 17 பேர் இடம் பெற்றுள்ளனர்.. அவர்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்... இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு மீன்வளத்துறை ஒதுக்கீடு, விமலவீர திசாநாயகவிற்கு வனத்துறை, மோகன், பிரியதர்ஷன் டி சில்வாவிற்கு குடிநீர் வாரியம் ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அம்பாறை மாவட்ட மாவட்ட எம்பியும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்தவருமான எச்.எம்.எம்.ஹாரீஸ் புது தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மறுத்துவிட்டேன்
இது தொடர்பாக செய்தியாளரிடம் அவர் சொன்னதாவது: "புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவையில் எனக்கு அமைச்சு பொறுப்பு ஒன்றைத் தர தீர்மானிக்கப்பட்டுள்ளதால் அதனை ஏற்றுக் கொள்ளுமாறு மூன்று தடவைகள் ஆளும் தரப்பு உயர்மட்டத்திலிருந்து எனக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டன.. இருந்தாலும்,அவர்களின் அந்த அழைப்பை நான் நிராகரித்தேன். இன்று மக்கள் பொருளாதார ரீதியாகவும் மற்றும் பல்வேறு வகையிலும் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் எந்தவொரு அமைச்சர் பொறுப்பையும் என்னால் ஏற்க முடியாது என்று அவர்களிடம் சொல்லிவிட்டேன்.
விமர்சனங்கள்
நாட்டில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி அதனைத் தீர்க்க வேண்டும்... மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும்... இந்த விஷயத்தில் நான் மக்கள் பக்கமாக நின்றே செயற்படுவேன். இதேவேளை, என்னை போன்றோர் தொடர்பில் இன்று பல்வேறு விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன... ஆனால் உண்மை நிலைமையை மக்கள் விரைவில் உணர்ந்து கொள்வார்கள்" என்றார்.