செல்போனால் நேர்ந்த துயரம்! கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த 3 வயது குழந்தை.. கடலூரில் சோகம்
கடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே வயலில் செல்போனை வைத்து விளையாடிக்கொண்டிருந்த 3 வயது சிறுமி தவறி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கையில் ஆறாம் விரலை போல செல்போன் முளைத்துவிட்டது. எப்போதும் செல்போனும் கையுமாக அலைந்து கொண்டிருப்பவர்களைத்தான் பொது இடங்களில் அதிகமாக காண முடிகிறது.
செல்போன்கையில் வைத்திருப்பது கூட தவறு இல்லைதான்.. ஆனால் அதைப் பயன்படுத்திகொண்டே செல்வதுதான் ஆபத்தானதாக மாறிவிடுகிறது.
கடலூரில் துயர சம்பவம்
குனிந்த தலை நிமிராமல் செல்போனை பார்த்துக்கொண்டே செல்வதால் நடைபாதையில் கிடக்கும் பள்ளத்தில் விழுந்து அடிபட்டுக்கொள்வது.. திருடர்களிடம் செல்போன்களை பறிகொடுப்பதும் என இதனால், ஏற்படும் பாதகங்களை சொல்லிக்கொண்டே போகலாம். அதுவும் குழந்தையிடம் கொடுத்தால் என்னவாகும் என்பதற்கு சான்றாகத்தான் கடலூரில் ஒரு துயர சம்பவம் நடைபெற்றுள்ளது.
செல்போனை கொடுத்துவிட்டு..
வேலைக்கு சென்ற நேரத்தில் குழந்தையை சமாளிப்பதற்காக செல்போனை கொடுத்ததால் குழந்தை செல்போன் பயன்படுத்திக்கொண்டே கிணற்றில் விழுந்து உயிரிழந்த நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்துள்ள மங்களூரை சேர்ந்தவர் தம்ப்தி ராஜ்குமார் (வயது 30) - சங்கீதா. இந்த தம்பதிக்கு ரித்திக் என்ற மகனும் ரிஷ்மிதா என்ற மகளும் உள்ளனர். இதில் ரித்திக் 2 ஆம் வகுப்பு படித்து வருகிறான். ரிஷ்மிதாவுக்கு 3 வயது ஆகிறது.
வயலில் ஓரமாக அமர வைத்துவிட்டு
ராஜ்குமார் வெளிநாட்டில் வசித்து வருகிறார். அவரது மனைவி சங்கீதா ஊர்ப்பகுதியில் வயக்காடு வேலைக்கு சென்று வருவாராம். சம்பவத்தன்று சங்கீதா தனது மாமனார் மற்றும் மாமியாருடன் வயலில் வேலைக்கு சென்று இருக்கிறார். தனது 3 வயது மகளை ஓரமாக அமரவைத்துவிட்டு விளையாடுவதற்காக செல்போனையும் கொடுத்து விட்டு சென்ற சங்கீதா, வயல்காட்டில் வேலை செய்து கொண்டு இருந்திருக்கிறார்.
கிணற்றுக்குள் விழுந்த சிறுமி
அப்போது திடீரென 3-வயது குழந்தை மாயமாகி இருந்ததை கண்டு தாய் சங்கீதா அதிர்ச்சி அடைந்தார். பதறிப்போன சங்கீதா சுற்றுப்புறம் முழுவதும் தேடிப்பார்த்துள்ளார். அருகில் கிணறு ஒன்றும் இருந்ததால் குழந்தை கிணற்றில் தவறி விழுந்து இருக்கலாம் என்று அச்சத்தில் வேப்பூர் தீ அணைப்பு நிலையத்திற்கு தக்வல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த வேப்பூர் தீ அணைப்பு நிலைய போலீசார் 1 மணி நேர போரட்டத்திற்கு பின் 3-வயது சிறுமியை சடலமாக மீட்டுள்ளனர்.
போலீஸ் விசாரணை
இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. குழந்தை ரிஷ்மிதாவின் உடல் பிரதேச பரிசோதனைக்காக விருதாசாலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.