ஷாக்.. முடிவெட்ட சொன்ன தலைமை ஆசிரியர்! பூச்சி மருந்தை குடித்த மாணவன்! 7 நாளில் 4 தற்கொலை முயற்சிகள்!
கடலூர் : கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், கடலூர் அருகே தலைமை ஆசிரியர் தலைமுடியை வெட்டி, வர சொன்னதற்காக பூச்சி மருந்து குடித்து பனிரெண்டாம் வகுப்பு மாணவன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 7 நாட்களில் கள்ளக்குறிச்சி, சேலம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 3 மாணவர்கள் பள்ளி வளாகத்திலேயே தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு, கலவரமாகவும் வெடித்தது.
இந்நிலையில், கடலூர் அருகே தலைமை ஆசிரியர் தலைமுடியை வெட்டி வர சொன்னதற்காக பூச்சி மருந்து குடித்து பனிரெண்டாம் வகுப்பு மாணவன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

+2 மாணவன்
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த முகாசபருர் கிராமத்தை சேர்ந்த ஒருவரது மகன். இவர் அக்கிராமத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் மாணவன் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மரியா ஜோசப் ராஜா, அதிகளவில் தலைமுடி வைத்துள்ள மாணவர்களை தனியாக அழைத்து, தலை முடியை அழகாக வெட்டிக்கொண்டு பள்ளிக்கு வர வேண்டுமென அறிவுரை கூறியதாக சொல்லப்படுகிறது.

தலைமை ஆசிரியர்
அப்பொழுது மாணவன் ஜெயக்குமார் தலை முடியை வெட்ட மாட்டேன் என்று சொன்னதாகவும், அதற்கு தலைமை ஆசிரியர், தலை முடியை வெட்ட கூடாது என்று நினைத்தால் பள்ளியின் பெற்றோர் கழக பொறுப்பாளர்களிடம் கையொப்பம் வாங்கி வா என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த மாணவன், பள்ளியை விட்டு வெளியே வந்துள்ளர்.

தற்கொலை
தொடர்ந்து அக்கிராமத்தில் அமைந்துள்ள மருந்து கடையில் எறும்புக்கு பயன்படுத்தப்படும் பூச்சி மருந்தை வாங்கி, தண்ணீரில் கலந்து குடித்துவிட்டு மீண்டும் பள்ளிக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் மாணவன் மதியம் பள்ளி முடியும் தருவாயில், தான் மருந்து குடித்து விட்டதாக சக மாணவரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த, மாணவனின் பெற்றோர்கள் உடனடியாக மாணவனை, மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

7 நாட்களில் 4 மாணவர்கள்
இதுகுறித்து மங்கலம்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலை முடியை தலைமையாசிரியர் அழகாக வெட்டி வர சொன்ன காரணத்தினால், பிளஸ் டூ மாணவன் பூச்சிமருருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அக்கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி சின்னசேலம் மாணவி மரணம், சேலம், காஞ்சிபுரம் மாணவர்கள் தற்கொலை முயற்சி வரிசையில் தற்போது கடலூர் மாணவனும் தற்கொலைக்கு முயன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications