அறநிலையத்துறை நோட்டீஸ் எங்களை கட்டுப்படுத்தாது..ஆய்வு நடத்த நடராஜர் கோவில் தீட்சிதர்கள் எதிர்ப்பு
சிதம்பரம் நடராஜர் கோயில் சொத்து விபரங்கள் குறித்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த வருவதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடலூர்: இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு செய்வதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள இந்து அறநிலையத் துறை ஆணையருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. இது எங்களை கட்டுப்படுத்தாது என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளனர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் வரும் 7, 8 ஆகிய தேதிகளில் இந்து சமய அறநிலைத் துறை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்யவுள்ளதாக கோயில் பொது தீட்சிதர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை கடலூர் இணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஆணையர் ஜோதி ஆகியோர் கடிதம் ஒன்று அனுப்பியிருந்தார்.
அதில், "சபாநாயகர் கோயில் நிர்வாகம் தொடர்பாக வரப்பெற்ற மனுக்கள் குறித்தும், கோயில் சட்டவிதிகளின்படி நிர்வகிக்கப்படுகிறதா என்பது குறித்தும், கோயிலை நேரடியாக ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டு கோயில் நிர்வாகத்தை சீரமைப்பது குறித்து உரிய பரிந்துரைகள் வழங்கிட இந்து சமய அறநிலையத் துறை சட்டம் 1959, சட்டப் பிரிவு 23 மற்றும் 33-ன் கீழ் ஆணையருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் ஒருங்கிணைப்பாளராக என்னை நியமனம் செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தயார் நிலையில் வைக்க உத்தரவு
சபாநாயகர் கோயில், குழு உறுப்பினர்களால் வரும் ஜூன் 7ம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நேரடியாக ஆய்வு செய்யப்பட உள்ளது. ஆய்வின்போது 2014 முதல் இதுவரையிலான வரவு, செலவு கணக்குகள், 2014 முதல் நாளது தேதி வரையிலான தணிக்கை அறிக்கைகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கோயிலில் நடைபெற்ற திருப்பணிகள் குறித்தான விவரங்கள், அவற்றுக்கான தொல்லியல்துறை கருத்துரு, இந்து சமய அறநிலையத்துறை அனுமதி விவரம், மதிப்பீடு விவரங்களும் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.

வரவு செலவு கணக்குகள்
கோயிலுக்கு சொந்தமான கட்டளைகள், அதற்கு சொந்தமான சொத்துகள் மற்றும் அவற்றிலிருந்து பெறப்படும் வருவாய், அந்த சொத்துகளின் தற்போதைய நிலை, இந்து சமய அறநிலையத்துறை சட்டவிதிகளின்படி அங்கீகரிக்கப்பட்ட சொத்துப் பதிவேடு, மரப் பதிவேடு, திட்டப் பதிவேடு மற்றும் காணிக்கை பதிவேடுகளையும் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.

முழுமையான ஒத்துழைப்பு தேவை
கோயிலுக்கு சொந்தமான நகைகள் மற்றும் விலையுயர்ந்தவற்றின் மதிப்பீட்டறிக்கை, கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் அதன் குத்தகைதாரர்கள் விவரம், கேட்பு வசூல் நிலுவை பதிவேடுகள் ஆகியவற்றையும் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் ஆய்வு நடத்துவதற்கு தீட்சிதர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

பொது தீட்சிதர்கள் எதிர்ப்பு
இந்த நிலையில், கோயில் பொது தீட்சிதர்கள், உச்ச நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. இது எங்களை கட்டுப்படுத்தாது என்று கூறி இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கோயிலில் ஆய்வு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் உள்ள இந்து அறநிலையத் துறை ஆணையருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அந்தக் கடிதத்தின் நகல்களை குடியரசுத் தலைவர், பிரதமர், தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலருக்கு அனுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications