கடலூரில் பாஜகவினர் பயங்கர மோதல்.. மேடை அருகே அடித்து கொண்ட கொடூரம்..போலீஸ் முன்பே கொலை மிரட்டல்
கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பாஜக நிர்வாகி அறிமுக கூட்டத்தில் இரு தலைவர்கள் மோதிக்கொண்ட அடித்து கொண்டனர். மேடை அருகே போலீசார் முன்பே வெட்டுவேன் என கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள புடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாரத் (வயது 28). இவர் பாஜகவின் மாவட்ட பிரச்சார அணி தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். கடலூர் மாவட்ட பாஜக துணை தலைவராக இருப்பவர் கோபிநாத். இவர் சிதம்பரம் கனகசபை நகரில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பாரத்துக்கும், பாஜக நிர்வாகிகள் சிலருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாரத் சார்பில் ஆன்லைனில் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

நிர்வாகி அறிமுக கூட்டம்
இந்நிலையில் தான் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர பாஜக தலைவராக சத்தியமூர்த்தி என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் பொறுப்பேற்பது மற்றும் நிர்வாகி அறிமுக கூட்டம் சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.

மேடை அருகே தாக்குதல்
அப்போது மாவட்ட துணைத் தலைவரான கோபிநாத் தரப்புக்கும், பாரத்துக்கும் இடையே திடீரென்று பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வேளையில் இருவருக்கும் இடையே கைக்கலப்பு நடந்ததாக கூறப்படுகிறது. கோபிநாத் உள்பட 2 பேர் சேர்ந்து பாரத்தை ஆபாசமாக திட்டி தாக்கியதாக சொல்லப்படுகிறது.

வழக்குப்பதிவு
இதில் காயமடைந்த பாரத் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் சம்பவம் குறித்து சிதம்பரம் நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் பாஜகவின் மாவட்ட துணை தலைவர் கோபிநாத் உள்பட இருவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் முன்பு தாக்குதல்
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி பாரத் கூறுகையில், ‛‛கோபிநாத் காவல் துறையினர் முன்பு என்னை தாக்கினார். நெஞ்சில் குத்தினார். சாதி பெயரை சொல்லி திட்டினார். புகார் அளிக்கும் வகையில் பெரிய ஆளா? என கொச்சையாக பேசினார். வெட்டுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்'' என்றார்.

ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பு
முன்னதாக நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பாக ஊர்வலமாக சென்று காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும் என பாஜகவினர் முடிவு செய்தனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதை பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதர் ஏற்றுக்கொண்டு ஊர்வலம் செல்ல வேண்டாம். தனித்தனியாக சிலைக்கு சென்று மாலை அணிவித்து வரலாம் என கூறினார்.

வாக்குவாதம்-தள்ளுமுள்ளு
அப்போது முன்னாள் மாவட்ட மருத்துவ அணி நிர்வாகி செளந்தர்ராஜன் என்பவர் ஊர்வலம் சென்றால் என்ன? என கேட்டுள்ளார். அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து இரு தரப்பினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த சக கட்சி நிர்வாகிகள் அவர்களை சமாதானப்படுத்தினர். இந்த சம்பவத்தால் நிகழ்ச்சி நடைபெற இருந்த திருமண மண்டபத்தின் வாயிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications