திமுக அரசுக்கு எதிராக போராடுவதில் சமரசம் இல்லை.. “தேர்தலுக்கு ரெடி ஆகுங்க”.. வேல்முருகன் சிக்னல்!
கடலூர் : திமுக கூட்டணியில் அங்கம் வகித்தாலும் மக்களுக்காக குரல் கொடுப்பதிலும், அரசுக்கு எதிராகப் போராடும் சூழல் ஏற்பட்டாலும் எந்த சமரசமும் இன்றி தமிழக வாழ்வுரிமைக் கட்சி செயல்படும் என்று தெரிவித்துள்ள தவாக தலைவர் வேல்முருகன், கட்சி நிர்வாகிகள் மக்களவைத் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன், திமுக கூட்டணியில் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றிருந்தாலும், அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்து வருகிறார்.
இதனால், லோக்கல் திமுகவினருக்கும், வேல்முருகன் கட்சியினருக்கும் முட்டல் மோதல்கள் நிகழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அரசுக்கு எதிராக சமரசம் இன்றிப் போராடுவோம் என மீண்டும் தெரிவித்திருக்கிறார் வேல்முருகன்.

வேல்முருகன் கூட்டம்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் என்.எல்.சி நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து போராட்டங்களை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஒன்றிய, நகர, பேரூராட்சி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவரும், பண்ருட்டி சட்டப்பேரவை உறுப்பினருமான தி.வேல்முருகன் கட்சியினரிடையே பேசினார்.

தொடர் போராட்டம்
அப்போது பேசிய வேல்முருகன், தமிழகம் முழுவதும் கட்சி வளர்ச்சியடைந்துள்ளது. என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து போராடி வருகிறோம். பரந்தூர் விமான நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்தவுள்ள நிலையில் அப்பகுதி மக்களுக்காகவும் போராடி வருகிறோம்.

தவாக குரல்
வட மாநிலத்தவர்கள் கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதை தடுக்க தனி கண்காணிப்புத் துறை ஏற்படுத்த வேண்டும் என அரசை வலியுறுத்தியுள்ளோம். 12,000 பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அனைத்து கோயில்களிலும் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும். அரியலூர் விவசாயி மரணத்தில் காவலர்களை கைது செய்ய வேண்டும் என்றும் குரல் கொடுத்தோம்.

சமரசம் கிடையாது
திமுக கூட்டணியில் அங்கம் வகித்தாலும் மக்களுக்காக குரல் கொடுப்பதிலும், அரசுக்கு எதிராக போராடும் சூழல் நிலவினாலும் எந்த சமரசமும் இன்றி தமிழக வாழ்வுரிமைக் கட்சி செயல்படும். மக்கள் பிரச்சனைகளை அறிந்து அதற்கேற்றவாறு செயல்பட்டு மக்களவைத் தேர்தலுக்கு கட்சி நிர்வாகிகள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனால், மக்களவைத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி திமுக கூட்டணியில் நீடிக்குமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications