கனகசபையில் அனுமதி... அரசாணையை தீட்சிதர்கள் ஏற்பார்களா? - கடலூர் மாவட்ட ஆட்சியர் சொல்வதென்ன?
கனகசபை மீது ஏறி தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி அளிப்பது பற்றி தீட்சிதர்கள் விரைவில் முடிவெடுப்பார்கள் என்று கடலூர் ஆட்சியர் பாலசுப்ரமணியம் தெரிவித்திருக்கிறார்.
கடலூர்: கனகசபை மீது ஏறி தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி அளிப்பது பற்றி தீட்சிதர்கள் விரைவில் முடிவெடுப்பார்கள் என்று கடலூர் ஆட்சியர் பாலசுப்ரமணியம் தெரிவித்திருக்கிறார். அனுமதி வழங்கிய அரசாணை தீட்சிதர்களுக்கு இன்று வழங்கப்படும் எனவும் தகவல் அளித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி நடராஜரை தரிசிக்கலாம் என அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் கனகசபை மீது ஏற பக்தர்களை தீட்சிதர்கள் அனுமதிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள புகழ்பெற்ற நடராஜர் கோயில் அங்குள்ள தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அரசாணை...தமிழக அரசு அதிரடி
தீட்சிதர்கள் முடிவு
கோயிலின் நடை முறைகள், வழிபாட்டு முறைகள், பக்தர்களை அனுமதிப்பது உள்ளிட்ட எல்லா விஷயங்களிலும் தீட்சிதர்களே முடிவு எடுத்து வருகின்றனர். தமிழக அரசின் அறநிலைத்துறை உத்தரவுகளை அவர்கள் பொருட்படுத்துவதில்லை.
இந்நிலையில் கரோனா தொற்று பரவல் காரணமாக கோயில்களில் வழிபட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோது நடராஜர் கோயிலில் கனகசபையில் பக்தர்களை ஏற அனுமதி மறுக்கப்பட்டது. அதன்பின் கரோனா குறைந்து தமிழகம் முழுவதும் கோயில்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் முன்புள்ள முறைப்படியே கோயில்களில் வழிபாடுகள் நடைபெறுகின்றன.
ஆனால் சிதம்பரம் நடராஜர் கோவிலில் மட்டும் கனகசபை மீது ஏறி வழிபட பக்தர்களுக்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. கனகசபை மீது ஏற முயன்றவர்களை தீட்சிதர்கள் தடுத்து தாக்குவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை கண்டித்தும், கனகசபை மீது ஏறி வழிபட அனுமதி வழங்க வேண்டும் என்றும் தமிழ் தேசிய பேரியக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில் சிதம்பரத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வந்தன.
இதனால் ஒரு கட்டத்தில் சிதம்பரத்தில் போராட்டங்கள் நடத்த கோட்டாட்சியரால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அறநிலையத்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தீட்சிதர்கள் தரப்பில் பேச்சு நடத்தியும்கூட பக்தர்களை கனகசபை மீது அனுமதிக்க தீட்சிதர்கள் மறுத்துவிட்டனர். இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த நிலையில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபடலாம் என்று அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நடராஜரை தரிசிக்கலாம்
பக்தர்களின் கோரிக்கையை ஏற்றும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படியும், கடலூர் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையை ஏற்றும் அரசாணை வெளியிடப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது. உரிய விதிமுறைகளை பின்பற்றி கனகசபை மீது ஏறி நடராஜரைத் தரிசிக்கலாம் என்று தமிழக அரசின் அரசாணை கூறுகிறது. சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் கடலூர், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஆகியோரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, கோவிட்-19க்கு முன்பிருந்த நடைமுறைப்படி ஆகம விதிகளைப் பின்பற்றி கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ய மாவட்ட ஆட்சியரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து, கடலூர் மாவட்ட ஆட்சியரது பரிந்துரையை ஏற்றும், திருக்கோயிலில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்து வந்த பழக்க வழக்கத்தின் படியும், பக்தர்களின் கோரிக்கைகளை ஏற்றும் அருள்மிகு சபாநாயகர் திருக்கோயிலின் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதித்து உத்தரவு பிறப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
தீட்சிதர்கள் ஏற்பார்களா?
எப்படி அரசாணை வெளியிடப்பட்டாலும் அதை தீட்சிதர்கள் தரப்பில் ஏற்று செயல்படுவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இன்று காலை அரசாணை குறித்த விவரம் வெளியானதும் உடனடியாக கோயிலுக்குள் கூடியிருக்கும் தீட்சிதர்கள் இதுகுறித்து தங்களுக்குள் விவாதித்து வருகிறார்கள். அரசாணையை ஏற்று கனகசபை மீது பக்தர்களை அனுமதிப்பதா? அல்லது கோயில் விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு விதிகளை காரணம் காட்டி அனுமதிக்க மறுப்பார்களா என்பது தீட்சிதர்களின் பலகட்ட ஆலோசனைக்குப் பிறகே தெரியவரும்.
மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
இதனிடையே கனகசபை மீது ஏறி தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி அளிப்பது பற்றி தீட்சிதர்கள் விரைவில் முடிவெடுப்பார்கள் என்று கடலூர் ஆட்சியர் பாலசுப்ரமணியம் தெரிவித்திருக்கிறார். அனுமதி வழங்கிய அரசாணை தீட்சிதர்களுக்கு இன்று வழங்கப்படும் எனவும் தகவல் அளித்துள்ளார்.