கூகுள் பே பண்ணிட்டேன்.. எனக்கு வரலயே.. பெட்ரோல் பங்கில்.. மாற்றுத்திறனாளி ஊழியருக்கு நேர்ந்த கொடுமை
கடலூர்: போட்ட பெட்ரோலுக்கு பணம் கேட்ட மாற்றுத்திறனாளி ஊழியர் மீது ஒரு கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூகுள் பே மூலம் பணம் போட்டதாக கூறி ஏமாற்ற முயன்ற இளைஞர்களை, மாற்றுத்திறனாளி தட்டிக்கேட்ட போது இந்த சம்பவம் நடந்திருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயம் அடைந்திருக்கும் அந்த ஊழியர், கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கூகுள் பே பணப்பரிமாற்றம்
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் ஒரு தனியார் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று இரவு 8 மணியளவில் ஒரு இளைஞர் பைக்கில் பெட்ரோல் போட வந்திருக்கிறார். 200 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பிய அவர், கூகுள் பே மூலமாக பணம் அனுப்புவதாக கூறியிருக்கிறார். பின்னர் அங்குள்ள கூகுள் பே ஸ்கேனில் செல்போனை வைத்த அவர், சிறிது நேரத்தில் பணம் அனுப்பிவிட்டேன் எனத் கூறியுள்ளார்.

"பணம் வரவில்லை"
அப்போது அவருக்கு பெட்ரோல் போட்ட கால் நடக்க முடியாத மாற்றுத்திறனாளி ஊழியர், செல்போனை செக் செய்துவிட்டு அக்கவுன்ட்டில் பணம் ஏறவில்லையே எனக் கேட்டிருக்கிறார். அதற்கு அந்த இளைஞரோ, "அதுபற்றி எல்லாம் எனக்கு கவலை கிடையாது. நான் அனுப்பிவிட்டேன்" எனக் கூறி அங்கிருந்து செல்ல முயற்சித்திருக்கிறார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய அந்த ஊழியர், "கூகுள் பேவில் நீங்கள் பணம் அனுப்பியதை காட்டுங்கள்" எனக் கேட்டுள்ளார். அதற்கு அந்த இளைஞர் மறுப்பு தெரிவிக்கவே, அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கொலைவெறி தாக்குதல்
பின்னர், அந்த ஊழியரை தள்ளிவிட்டு அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்நிலையில், தனது நண்பர்கள் 2 பேருடன் நள்ளிரவில் அந்த பெட்ரோல் பங்குக்கு அந்த இளைஞர் வந்துள்ளார். அப்போது, அறையில் தூங்கிக் கொண்டிருந்த மாற்றுத்திறனாளி ஊழியரை அவர்கள் உருட்டுக்கட்டை, இரும்பு ராடு போன்ற ஆயுதங்களை கொண்டு தாக்கினர். இதில் அவருக்கு மண்டை உடைந்து ரத்தம் வழிந்தது.

கைது நடவடிக்கை
இதையடுத்து, அங்கிருந்த மற்ற ஊழியர்கள் வந்து, அந்த மாற்றுத்திறனாளி ஊழியரை அந்த இளைஞர்களிடம் இருந்து மீட்டனர். பின்னர் அவரை மருத்துவமனையிலும் அனுமதித்தனர். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், பெட்ரோல் பங்க் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து அதே பகுதியைச் சேர்ந்த சித்திக் அலி (24), அப்துல் ஹமீது (22) உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications