திடீரென பிரேக் அடித்து நின்ற பஸ்.. குழந்தையுடன் வெளியே வந்து விழுந்த பெண்..பதைபதைக்க வைக்கும் காட்சி
கடலூர்: கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் தனியார் பேருந்தில் கைக்குழந்தையுடன் பயணித்த பெண், திடீரென பிரேக் போட்டதால் நிலை தடுமாறி பேருந்தில் இருந்த விழுந்த சம்பவம் பதை பதைக்க வைத்துள்ளது.
சென்னையை தவிர்த்து தமிழகத்தின் வெளி மாவட்டங்களில் அரசு பஸ்களுக்கு நிகராக தனியார் பஸ்களும் அதிக அளவில் இயக்கப்படுவதை நாம் காண முடியும்.
அந்த வகையில், கடலூர் மாவட்டத்தில் இருந்து பண்ருட்டி, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பேருந்துகளை போல தனியார் பேருந்துகளும் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன.

அதிக பயணிகளை ஏற்றுவதற்காக
தனியார் பேருந்துகள் டிக்கெட்டுகளை அதிக அளவில் ஏற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் மின்னல் வேகத்தில் பேருந்துகளை இயக்குவதாகவும்.. நகரப்பகுதிகளில் கூட பிற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுவதாக பரவலாக பயணிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

குறுக்கே வந்த மோட்டார் சைக்கிள்
இந்த நிலையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ்சில் கைக்குழந்தையுடன் பின் இருக்கையில் அமர்ந்திருருந்த பெண் பயணி ஒருவர், பஸ்சில் இருந்து நேற்று தவறி விழுந்து காயம் அடைந்தார். நேற்று நடைபெற்ற இந்த சம்பவத்தின் சிசிடிவி கட்சிகள் வெளியாகி தற்போது பதைபதைக்க வைத்துள்ளது. நெல்லிக்குப்பம் பேருந்து நிலையம் அருகே தனியார் பஸ் வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிள் குறுக்கே வந்துள்ளது.

குழந்தையோடு தலைக்குப்புற..
இதனால் அந்த பஸ் டிரைவர் சட்டென பிரேக்கை அழுத்தியுள்ளார். இதில் பின் இருக்கையில் இருந்த பெண் பயணி ஒருவர் பின்பக்க படிக்கட்டு வழியாக தலைக்குப்புற கைக்குழந்தையோடு விழுகிறார். இந்தக் காட்சிகள் பதை பதைக்க வைக்கும் வகையில் உள்ளது. பஸ்சில் இருந்த பெண் தனது குழந்தையுடன் கீழே விழுந்ததையும் கவனிக்காமல் மீண்டும் அந்த பஸ்சை டிரைவர் இயக்கியுள்ளார். இந்தக் காட்சிகளை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் கூச்சலிட்டனர்.

ஆஸ்பத்திரியில் அனுமதி
உடனடியாக கைக்குழந்தையுடன் கீழே விழுந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பெண்ணுக்கு லேசான காயமும் குழந்தைக்கு அதிக காயம் அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. விபத்தில் கீழே விழுந்த பெண் புகார் எதுவும் அளிக்காததால், போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. எனினும் இந்த சம்பவத்துக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
சென்னயை தவிர்த்து வெளி மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படும் தனியார் பேருந்துகளால் விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதிக டிக்கெட்டுகளை ஏற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் பஸ்சை ஓட்டுநர்கள் ஓட்டுவதால் சாலைவிதிகளையும் மதிப்பது இல்லை. இதனால் பிற வாகன ஓட்டிகளும் சாலையில் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது என்று குற்றம் சாட்டும் சமூக ஆர்வலர்கள், தனியார் பஸ்கள் அதிவேகத்தில் இயக்கப்படுவதை கண்காணித்து உரிய நடவடிக்கையை போக்குவரத்து துறை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications