பிணவறை ஃப்ரீசர் பாக்ஸில் 7 மணிநேரம் இருந்த சடலம்.. உயிரோடு வந்த அதிசயம்.. உத்தப்பிரதேசத்தில் ஷாக்!
மொரோதாபாத் : உத்தரபிரதேசத்தில் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்து 7 மணிநேரத்திற்கும் மேலாக பிணவறையின் ஃப்ரீசர் பாக்ஸில் வைக்கப்பட்ட நபர் திடீரென உயிருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆர்யன் கான் வழக்கு.. போதிய ஆதாரமில்லாமல் நீதிமன்றத்தில் திணறிய என்சிபி.. வெளியான ஐகோர்ட் தீர்ப்பு
மொரோதாபாத் நகரில் உடற்கூறு செய்யவேண்டிய நேரத்தில் உயிரோடு வந்த 40 வயது மதிக்கத்தக்க அந்த நபரால் குடும்பமே மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது. தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து
உத்தரபிரதேசம் மாநிலம் மொரோதாபாத்தை சேர்ந்தவர் ஸ்ரீகேஷ் குமார். இவர் அப்பதியில் எலெக்ட்ரிஷியனாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த வியாழனன்று நடந்த மோட்டார் வாகன விபத்தில் ஸ்ரீகேஷ் குமார் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு ஸ்ரீகேஷ் குமார் அழைத்து வரப்பட்ட நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர்.
உடற் கூறாய்வு
பின்னர் அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இரவு நேரம் ஆகிவிட்டதால் அவரது உடலை மறுநாள் உடற்கூறு ஆய்வு செய்ய மருத்துவர்கள் முடிவெடுத்தனர். பின்னர் அவரது உடல் மார்ச்சுவரியில் உள்ள ஃப்ரீசர் பெட்டியில் அடைக்கப்பட்டது. உடல் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக உறைபனி அளவிற்கு வெப்பநிலையில் உள்ள ஃப்ரீசர் பெட்டியில்தான் உடல்களை அடைத்து வைப்பது வழக்கம்.
பிணவறைக்கு வந்த உறவினர்கள்
மறுநாள் அவரது உடலை பெற்றுக்கொள்வதற்காக உறவினர்கள் பிணவறைக்கு வந்தனர். அப்போது உறவினர்கள் ஸ்ரீகேஷ் குமாரின் உடலை காண்பித்தனர். பின்னர் அவரது உடலை உடற்கூறு செய்ய குடும்ப உறுப்பினர்கள் சம்மதித்து கையெழுத்திட்டனர்.
உடலில் இருந்த அசைவுகள்
அப்போது ஸ்ரீகேஷ்குமாரின் உடலில் சற்று அசைவுகள் இருப்பதை கவனித்த அவரது உறவினர் பெண் மதுபாலா இதை அனைவரிடமும் தெரிவித்தார். இதனால் ஆச்சரியமும், குழப்பமும் அடைந்த குடும்ப உறுப்பினர்கள் இதுகுறித்து மருத்துவர்கள் மற்றும் காவல்துறையினரிடம் தெரிவித்தனர். அதன்பின்னர் அவர் உயிரோடு இருப்பதை பார்த்து அதிர்ச்சிஅடைந்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க மீரட்டில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முறையான சிகிச்சை
அங்கே அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு அவரது உடல் தேறி வருகிறது. அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக தெரிவித்த மருத்துவர்கள் சுயநினைவுக்கு இன்னும் வரவில்லை எனவும் தெரிவித்தனர். இதனால் ஓரளவு நிம்மதியடைந்த குடும்ப உறுப்பினர்கள் அவர் சீக்கிரம் சுயநினைவு பெற்று குணம் அடையவேண்டும் என கடவுளை பிரார்த்தித்து வருகின்றனர். மேலும் உயிரோடு இருப்பவரை இறந்துவிட்டதாக கூறிய மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
மருத்துவர்
சில வருடங்களுக்கு முன்னர் சத்யராஜ், சிபி நடித்து வெளியான திரைப்படம் ஒன்றில் பொறுப்பற்ற மருத்துவர் ஒருவர் செல்போனில் பேசிக்கொண்டே உயிரோடு இருக்கும் பெண்ணை இறந்துவிட்டதாக சொல்வார். பிறகு அந்த பெண்ணிற்கு உயிர் இருக்கும். அதுபோல் உத்தரப்பிரதேசத்திலும் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.