3 விவசாய சட்டங்களை திரும்பப்பெற ஒரே மசோதா.. MSP விஷயத்தில் மத்திய அரசு முடிவு இதுதான்.. பரபர தகவல்
டெல்லி: கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற ஒரே மசோதாவை மத்திய அரசு கொண்டு வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாகவும் மத்திய வேளாண் துறை அமைச்சகம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
மத்திய அரசு கடந்த ஆண்டு புதிதாக 3 விவசாய சட்டங்களை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. விவசாயிகள் நலனுக்காக இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
இருப்பினும், இந்தச் சட்டம் பெருநிறுவனங்களுக்குச் சாதகமாக இருப்பதாகக் கூறி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட விவசாயிகள் போராட்டம் தற்போது வரை நீடிக்கிறது.

விவசாயிகள் போராட்டம்
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் தொடங்கிய இந்தப் போராட்டம், விரைவில் தலைநகர் டெல்லியை அடைந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்ட விவசாயிகள் கடந்த 11 மாதங்களாக கடும் குளிர், கொளுத்தும் வெயில் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராடி வருகின்றனர். உள்ளூர் பிரபலங்கள் முதல் சர்வதேச பிரபலங்கள் வரை பலரும் விவசாயிகள் போராட்டத்திற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

விவசாய சட்டங்கள் வாபஸ்
இந்தப் போராட்டத்தில் பலரும் உயிரிழந்தனர். பல்வேறு நெருக்கடிகளைத் தாண்டியும் இந்தப் போராட்டத்தை விவசாயிகள் தொடர்ந்து நடத்தினர். முதலில் இது தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்த போதிலும் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. பல மத்திய அமைச்சர்களும் விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை எனத் தொடர்ந்து கூறி வந்தனர். இந்தச் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன் மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக அறிவித்தார். மேலும், நாட்டு மக்களிடையே மன்னிப்பையும் அவர் கேட்டுக்கொண்டார்.

விவசாயிகள் கோரிக்கை
இந்த அறிவிப்புக்குப் பின்னரும் கூட விவசாயிகள் தங்கள் போராட்டத்தை முடித்துக் கொள்ளவில்லை. விவசாய சட்டங்களை வாபஸ் பெறுவது குறித்து நாடாளுமன்றத்தில் முறையாகச் சட்ட மசோதா இயற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். மேலும், குறைந்தபட்ச ஆதரவு விலை, மின் திருத்த மசோதா, லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக அமைச்சர் மீது நடவடிக்கை எனப் பல கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

மூன்றுக்கும் ஒரே மசோதா
இந்நிலையில், சர்ச்சைக்குரிய மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவைத் தயாரிக்கும் பணிகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதற்குப் பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு விரிவான மசோதாவாக இருக்கும் என்றும் மூன்று விவசாய சட்டங்களையும் திரும்பப் பெற தனித்தனி சட்டங்களாக இல்லாமல் ஒரே சட்டமாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

விரிவான மசோதா
குளிர்காலக் கூட்டத்தொடரில் கொண்டுவரப்படும் இந்த மசோதா, புதிய விவசாய சட்டங்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட அனைத்து வாரியங்களையும் மூட வழிவகை செய்யும். மேலும், அந்த வாரியங்கள் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் செல்லாததாக அறிவிக்கப்படும். மேலும், சட்டம் அமலில் இருந்த போது சில மாநிலங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டன. அவை அனைத்தும் கூட ரத்து செய்யப்படும் வகையில் விரிவான ஒரு மசோதா உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Recommended Video

குறைந்தபட்ச ஆதரவு விலை
மேலும், விவசாயிகள் வலியுறுத்தி வரும் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) பிரச்சினை குறித்து வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டுமா அல்லது சட்டப்பூர்வ மசோதாவை இயற்ற வேண்டுமா என்பது குறித்து வேளாண் அமைச்சகம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.












Click it and Unblock the Notifications