விவசாயிகளின் பாரத் பந்த்- புதுவை உட்பட 11 மாநில அரசுகள் முழு ஆதரவு- தமிழகத்திலும் கடைகள் அடைப்பு!
டெல்லி: மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் இன்று 13-வது நாளக கொட்டும் பனியிலும் தொடருகிறது. மேலும் போராடும் விவசாயிகள் அழைப்பை ஏற்று நாடு தழுவிய முழு அடைப்பு- பாரத் பந்த்-க்கு புதுச்சேரி உட்பட 11 மாநில அரசுகள் ஆதரவு தெரிவித்துள்ளது. புதுவையில் அரசு,தனியார் பேருந்துகள் இயங்கவில்லை; அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களால் கார்ப்பரேட் நிறுவனங்களே பயனடையும்; விவசாயிகளின் வாழ்வாதாரம் நாசமாகும் என்பது விவசாயிகளின் குரல். ஆகையால் மத்திய அரசு இந்த 3 விவசாய சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி பல லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களை தொடர்ந்து மத்திய அரசு நடத்திய 5 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. இதனையடுத்து நாடு தழுவிய அளவில் இன்று பாரத் பந்த் - முழு அடைப்பு போராட்டத்துக்கு விவசாயிகளின் போராட்டக்குழு அழைப்பு விடுத்துள்ளது. இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
மேலும் புதுச்சேரி, பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான், மேற்கு வங்கம், கேரளா, ஜார்க்கண்ட், ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் ஆகிய மாநில அரசுகளும் இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழகத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த பாரத் பந்த் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கின்றன.
இன்று பாரத் பந்த்.. தமிழகத்தில் பஸ், ரயில் ஓட நடவடிக்கை, ஆட்டோக்கள் ஓடாது.. 1 லட்சம் போலீஸ் குவிப்பு
இன்று முழு அடைப்பை முன்னிட்டு புதுவையில் அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அனைத்து வர்த்தக நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆட்டோக்கள், வேன்களும் இயக்கப்படவில்லை. புதுவை மீன்மார்க்கெட்டும் மூடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் 2,000 கடைகள் மூடப்பட்டுள்ளன. ஈரோட்டில் காய்கறி சந்தையும் மூடப்பட்டுள்ளது. போக்குவரத்து கழக பணிமனைகள் முன்பாக தொழிலாளர்கள் போராட்டம் நடத்த உள்ளனர். மேலும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக தமிழக எதிர்க்கட்சிகள் மறியல் போராட்டமும் நடத்த உள்ளன. இந்த முழு அடைப்பு போராட்டத்தில் எந்த வன்முறையும் நிகழாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.