"கைவிலங்கு".. அமெரிக்கா டூ இந்தியா 15 ஆண்டில் நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் எவ்வளவு பேர்? அடேங்கப்பா
டெல்லி: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்கள் கைவிலங்கு மாட்டப்பட்டு அந்த நாட்டின் ராணுவ விமானம் மூலம் நம் நாட்டுக்கு நாடு கடத்தி வரப்பட்டனர். கைவிலங்கு, காலில் சங்கிலி மாட்டி நாடு கடத்தப்பட்ட வீடியோ சர்ச்சையாகி உள்ள நிலையில் கடந்த 15 ஆண்டுகளில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். இதுபற்றி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று அதிபர் தேர்தல் பிரசாரத்தில் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். அதன்படி தற்போது அவர் வெற்றி பெற்று அதிபராகி உள்ளார். இதையடுத்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டினரை நாடு கடத்தும் பணி தொடங்கி உள்ளது.

முதற்கட்டமாக இந்தியாவை சேர்ந்த 104 பேர் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் சி17 ரக போர் விமானத்தில் இந்தியர்கள் 104 பேர் கைவிலங்கு மாட்டப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். இது சர்ச்சையாகி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் கைவிலங்கு மாட்டப்பட்டது தான்.
அமெரிக்காவின் எல்லை பாதுகாப்புப் படையான யுஎஸ்பிபி (US Border Patrol) இந்தியர்கள் கைவிலங்கிட்டு விமானத்தில் அழைத்துச் செல்லப்படும் வீடியோவை பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது. இந்தியா - அமெரிக்கா இடையே நல்ல உறவு உள்ள நிலையில் இந்தியர்கள் இப்படி கைவிலங்குடன் நாடு கடத்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அதோடு மத்திய அரசை எதிர்க்கட்சிகள் விமர்சிக்க தொடங்கி உள்ளனர்.
ஆனால் மத்திய அரசு மற்றும் பாஜக தரப்பில், ‛‛நாடு கடத்தப்படுவது தொடர்பான அமெரிக்காவின் சட்டத்தில் இந்த நடைமுறை உள்ளது. அதன்படியே கைவிலங்கு மாட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதோடு வரும் நாட்களில் இதுபோன்ற நடைமுறையை பின்பற்றக்கூடாது என்று அமெரிக்காவிடம் எடுத்து கூறப்படும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் கடந்த 15 ஆண்டுகளில் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த விபரம் வெளியாகி உள்ளது. நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தில் இதுபற்றிய விபரத்தை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். இதுபற்றி அவர் கூறியதாவது:
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படுவது ஒன்றும் புதிது அல்ல. பல ஆண்டுகளாக இது நடந்து வருகிறது. இந்த நடைமுறை என்பது ஒரேயொரு நாட்டுக்கு மட்டும் பொருந்தாது. நம் கவனமும் கூட சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிவதில் இருக்க வேண்டும். நாடு கடத்தப்படுபவர்கள் தவறான செயல்முறைக்கு உள்ளாக்கப்படவில்லை என்பதை அமெரிக்காவுடன் சேர்ந்து உறுதிப்படுத்த தயாராக இருக்கிறது.
டேட்டாக்களின்படி பார்த்தால் 2019 ம் ஆண்டில்தான் அமெரிக்காவில் இருந்து அதிக இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். மொத்தம் 2,042 பேர் அந்த ஆண்டில் நாடு கடத்தப்பட்டனர். அதன்பிறகு 2020ல் 1,889 பேர் நாடு கடத்தப்பட்டனர். ஆண்டு வாரியாக சொல்ல வேண்டும் என்றால் 2009ல் 734 பேர், 2010ல் 799 பேர், 2011ல் 597பேர், 2012ல் 530 பேர், 2013ல் 515 பேர், 2014ல் 591 பேர், 2015ல் 708 பேர், 2016ல் 1,303 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
2017ல் 1,024 பேர், 2018ல் 1,180 பேர், 2019ல் 2,042 2020ல் 1,889 பேர், 2021ல் 805 பேர், 2022ல் 862பேர், 2023ல் 617பேர், 2024ல் 1,368 பேர், 2025ம் ஆண்டின் பிப்ரவரி 5ம் தேதி வரை 104 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். மொத்தம் 15, 756 பேர் கடந்த 15 ஆண்டுகளில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்'' என்று கூறினார்.












Click it and Unblock the Notifications