காஷ்மீரில் ஷாக்.. ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகளை.. சுட்டுக்கொன்ற இந்திய ராணுவம்
டெல்லி: காஷ்மீரின் உரி பகுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மூன்று பயங்கரவாதிகளை இந்திய பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்களையும் பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் அத்துமீறி நுழைவதாகத் தகவல் வெளியானது.
இதையடுத்து எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்திய பாதுகாப்புப் படையினர் கடந்த சில நாட்களாகவே தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

3 பேர் சுட்டுக்கொலை
அப்போது எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகேயுள்ள உரி பகுதிக்கு அருகே ராம்பூர் செக்டாரில் 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இருப்பதைப் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர். அவர்களை மூவரையும் இந்திய பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதாகவும் இதன் மூலம் பெரும் சதிச் செயல் முறியடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (பிஓகே) பகுதியில் இருந்து அவர்கள் மூவரும் வந்ததாகவும் அவர்களில் ஒருவர் பாகிஸ்தானியர் என்பதையும் இந்தியா ராணுவம் உறுதி செய்துள்ளது. அதேநேரம் மற்ற பயங்கரவாதிகளின் விவரங்கள் குறித்து இன்னும் எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்
மேலும், அந்த பயங்கரவாதிகளிடம் இருந்து 5 ஏகே 47 ரக துப்பாக்கிகள், 8 கைத்துப்பாக்கிகள் மற்றும் 70 கையெறி குண்டுகளை இந்திய ராணுவம் கைப்பற்றியுள்ளது. இந்த ஆண்டு மட்டும் இதுவரை காஷ்மீரில் இருந்து 97 கைத்துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சினார் கார்ப்ஸ் கமாண்டர் ஜெனரல் டிபி பாண்டே கூறுகையில், "இன்று அதிகாலையில், ராம்பூர் செக்டார் ஹத்லாங்கா வனப்பகுதியில் பயங்கரவாதிகளின் நடவடிக்கை கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்தியா ராணுவத்தின் நடவடிக்கை மூலம் 3 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். கடந்த செப். 18ஆம் தேதி இதுபோல நடந்த ஒரு ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது.

ஊடுருவல் முயற்சி
கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி இரவு உரி செக்டாரில், ஊடுருவ முயற்சி நடந்தது. அதில் ஆறு தீவிரவாதிகள் இருந்தனர், 4 பேர் ஊடுருவ முயன்றனர். அதேநேரம் மற்ற இருவர் பேக்அப் ஆக இருந்தனர். அவர்களை எதிர்த்து துப்பாக்கிச்சூடு நடத்தினோம். அதில் அவர்கள் பின்வாங்கினர். இந்த ஆண்டு பயங்கரவாதிகள் சரணடைவதற்கான வாய்ப்பை நாங்கள் வழங்குகிறோம். இதனால் பலர் சரணடைகின்றனர், இதைக் கண்டு பாகிஸ்தான் ஏமாற்றம் அடைந்துள்ளது. இதனால் அங்கிருந்து பாகிஸ்தான் தங்கள் பயங்கரவாதிகளை இங்கு அனுப்புகின்றனர். இதன் மூலம் எளிதாக இங்குத் தாக்குதல் நடத்த முடியும் என்று நினைக்கிறார்கள்" என்று அவர் தெரிவித்தார்.

பண்டிகை காலம்
வரும் பண்டிகை காலத்தில் நாட்டின் முக்கிய பகுதிகளைக் குறிவைத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக இந்திய புலனாய்வுத் துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து நாடு முழுவதும் சோதனை நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். அதேபோல கடந்த சில நாட்களாகவே பாகிஸ்தான் நாட்டில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சி பல முறை முறியடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications