EV துறையில் 2030-க்குள் 5 கோடி வேலை வாய்ப்புகள்.. பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
எலக்ட்ரிக் வாகன துறையில் 2030-ம் ஆண்டுக்குள் 5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: மின்சார வாகன துறையில் வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் நேரடியாகவும் மறைமுகமாகவும் என 5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022-23 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மத்திய அரசு தாக்கல் செய்யும் முழுமையான பட்ஜெட் இது என்பதால் இந்த பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதுபோக இந்த ஆண்டு மட்டும் 9 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் இந்தாண்டு பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பட்ஜெட்டில் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உச்சகட்ட எதிர்பார்ப்பு.. மோடி 2.O-ன் கடைசி முழு பட்ஜெட்! எப்போது தொடங்கும் நிர்மலா உரை? முழு விவரம்
பொருளாதார ஆய்வறிக்கை
நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 2023-ம் ஆண்டின் வளர்ச்சி, பொருளாதார ரீதியாக ஏற்பட்ட சிக்கல், முதலீடுகள் கடன், ஏற்றுமதி, இறக்குமதி வருவாய் போன்றவை தொடர்பான விவரங்கள் இந்த அறிக்கையில் இடம்பெறும். இந்த ஆய்வறிக்கை நிதி துறையின் பொருளாதார விவகாரங்கள் துறையின் பொருளாதாரப் பிரிவு சார்பாக உருவாக்கப்படுகிறது.
கொரோனாவுக்கு முந்தைய நிலையை
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2023-24-இல் 6.5% ஆக இருக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-22இல் இது 8.7%ஆகவும் அதைத் தொடர்ந்து நடப்பு நிதியாண்டில் இது 7% ஆக இருந்தது கவனத்தில் நிறுத்த வேண்டியது. நாட்டின் பொருளாதாரம் கொரோனாவுக்கு முந்தைய நிலையை அடைந்துவிட்டதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
5 கோடி வேலை வாய்ப்புகள்
அதேபோல், ஆற்றல் மற்றும் எரிசக்தி துறையில் ஏற்படும் மாற்றங்கள் இந்தியாவை அடுத்த 25 ஆண்டுகளுக்கு வழிநடத்தும். அதேபோல், மின்சார வாகன உற்பத்தி தொழிற்துறையில் 2030 ஆம் ஆண்டிற்குள் 5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- கிரீன் எனர்ஜியை நோக்கிய மாற்றத்தில் வாகன தொழில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2030 ஆம் ஆண்டுக்குள்
2022- 2030 ஆண்டிற்குள் உள்நாட்டு மின்சார வாகனங்கள் (EV) சந்தையின் வளர்ச்சி 49 சதவிகிதம் என்ற ஒருங்கிணைந்த வருடாந்திர வளர்ச்சி (CAGR) விகிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மின்சார வாகன துறையில் 2030 ஆம் ஆண்டிற்குள் நேரடியாகவும் மறைமுகமாகவும் 5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாகும். இந்த வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும் ஆதரவு அளிக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.