பிஎம் கேர்ஸ் நிதியில் அரசு மருத்துவமனைகளில் 551 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க உத்தரவு
டெல்லி: பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து அரசு மருத்துவமனைகளில் 551 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலையால் டெல்லி, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் அவதியுறும் நிலையில் அங்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கல் பாதிக்கப்படுகிறார்கள். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் டெல்லியில் இதுவரை 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துவிட்டனர்.
இதையடுத்து ஆக்ஸிஜன் இறக்குமதி செய்யவும் உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிக்கவும் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் பிஎம் கேர்ஸ் மூலம் அரசு மருத்துவமனைகளில் புதிதாக 551 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
ஆக்ஸிஜன் தட்டுப்பாடு எதிரொலி... சிகிச்சைக்காக தனி விமானத்தில் சென்னைக்கு வந்த குஜராத் தொழிலதிபர்..!
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: அரசு மருத்துவமனைகளில் 550 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து கணிசமான நிதியை ஒதுக்கவும் ஒப்புதல் அளித்துள்ளார். பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்த ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் இதற்கான கொள்முதல் பணிகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கவனிக்கும் என அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.