குடியரசு தின விழா: முதல்முறையாக பங்கேற்ற எகிப்து வீரர்கள், அக்னி படையினர்..முக்கிய அம்சங்கள்
டெல்லி: இந்தியாவின் குடியரசு தின விழா இன்று கோலகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில்சிறப்பு விருந்தினராக முதல் முறையாக எகிப்து அதிபர் அப்தெல் படாக் அல் சிசி கலந்து கொண்டார். குடியரசு தின அணிவகுப்பில், முதலில் எகிப்திய ஆயுதப்படையின் குழுவும் இடம் பெற்றிருந்தது. இந்த குழுவில் 144 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.
இந்தியாவின் 74-வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வழக்கமாக டெல்லி ராஜபாதையில் நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்டம் இந்த முறை சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட கடமை பாதையில் நடைபெற்றது.
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது தேசியக் கீதம் இசைக்கப்பட்டது.
கெத்து காட்டிய இந்தியா! குடியரசு தின அணிவகுப்பில்.. கவனம் ஈர்த்த
சிறப்பு மிக்க நிகழ்வுகள்
ஜனாதிபதி தேசியக் கொடி ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தியவுடன் குடியரசு தின அணிவகுப்பு தொடங்கியது. கடமை பாதையில் குடியரசு தலைவர் மாளிகை அருகே தொடங்கிய அணிவகுப்பு விஜய் சவுக், இந்தியா கேட் வழியாக செங்கோட்டை வரை சென்றது. இந்த குடியரசு தின விழாவில் முதல் முறையாக பல்வேறு சிறப்புமிக்க நிகழ்வுகள் நடைபெற்றன. அதன் விவரங்களை காணலாம்.
பிரம்மாண்ட அணிவகுப்பு
* ஆங்கிலேயர் கால காலனியாதிக்க அடையாளத்தை மாற்றும் விதமாக கடந்த செப்டம்பர் மாதம் ராஜபாதையின் பெயர் கடமை பாதையாக மாற்றப்பட்டது. கடமை பாதையில் குடியரசு தின விழா முதல் முறையாக நடைபெற்றது. காலை 10.30 மணிக்குத் தொடங்கிய இந்த பிரம்மாண்ட அணிவகுப்பு நாட்டின் ராணுவ பலத்தையும் கலாச்சார பன்முகத்தன்மையையும் பறைசாற்றும் வகையில் அமைந்து இருந்தது.
முதல் முறையாக எகிப்து அதிபர்
* குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக முதல் முறையாக எகிப்து அதிபர் அப்தெல் படாக் அல் சிசி கலந்து கொண்டார். குடியரசு தின அணிவகுப்பில், முதலில் எகிப்திய ஆயுதப்படையின் குழுவும் இடம் பெற்றிருந்தது. இந்த குழுவில் 144 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.
* இந்த ஆண்டு மத்திய ரிசர்வ் படை போலீஸ் பிரிவின் பெண்கள் குழுவும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் கலந்து கொண்டது. அதேபோல், கடற்படை குழுவிற்கு பெண் அதிகாரி தலைமை தாங்கினார். அக்னி வீரர்களும் முதல் முறையாக குடியரசு தின அணி வகுப்பில் இந்த ஆண்டு கலந்து கொண்டனர்.
இந்திய பீல்டு துப்பாக்கிகள்
* இந்த ஆண்டு குடியரசு தின அணி வகுப்பில் இந்திய ராணுவத்தின் அனைத்து ஆயுதங்களும் காட்சிப்படுத்தப்பட்டன. இதற்கு முன்பாக 21 குண்டுகள் முழங்குவதற்கு பிரிட்டிஷ் துப்பாக்கிகள் பயன்படுத்தப்படும். நடப்பு ஆண்டு முதல் முறையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 105 எம்.எம் பீல்டு துப்பாக்கிகள் (IFGs) பயன்படுத்தப்பட்டன. வெடிமருந்துகளும் முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்று ராணுவம் தெரிவித்தது.
முதல் முறையாக பெண் வீராங்கனைகள்
* இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் ரஷ்ய டாங்கிகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அர்ஜூன் மற்றும் பிற பீரங்கிகள் அணி வகுத்தன. ஆகாஷ் ஏவுகணை அமைப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டன.
* எல்லை பாதுகாப்பு படையின் (BSF) கேமல் குழுவில் முதல் முறையாக இந்த ஆண்டு பெண் வீராங்கனைகளும் பங்கேற்றனர்.
முதல் வரிசையில் சுமை தூக்குபவர்கள்
* நடப்பு ஆண்டில் "பொதுமக்கள் பங்கேற்புடன் குடியரசு தின விழா" என்பது கருப்பொருளாக நிர்ணயிக்கப்பட்டது. இதன்காரணமாக, குடியரசு தின விழாவின் முதல் வரிசையில் நாடாளுமன்ற கட்டிடத்தைக் கட்டிய தொழிலாளர்கள், ரிக்ஷா வண்டி இழுப்பவர்கள், சுமை தூக்குபவர்கள், காய்கறி விற்பனை செய்பவர்கள் உள்ளிட்ட குடிமகன்கள் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்படிருந்தனர். மிக மிக முக்கிய பிரமுகர்களுக்கு ஒதுக்கப்படும் முதல் வரிசையில் இவர்கள் அமர வைக்கப்பட்டிருந்தனர் என்பது கவனிக்கத்தக்கது.