லட்சத்தீவு அருகே வந்த போர்க்கப்பல்.. இந்தியா கடும் எதிர்ப்பு! இறங்கி வந்து பவ்யம் காட்டும் அமெரிக்கா
டெல்லி: இந்திய அரசின் அனுமதி இல்லாமல் அமெரிக்க போர்க் கப்பல் லட்சத்தீவு அருகே நுழைந்த நிலையில், இதை அமெரிக்க கடற்படை வெளிப்படையாகவே தெரிவித்து அதிர்ச்சியளித்தது. ஆனால் தற்போது அமெரிக்கா இந்த விவகாரத்தில் பவ்யம் காட்ட ஆரம்பித்துள்ளது.
அமெரிக்க கடற்படை 7வது ப்ளீட் தளபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டிருந்தது.
அந்த அறிக்கையில், ஏப்ரல் 7 ம் தேதி, யுஎஸ்எஸ் ஜான் பால் ஜோன்ஸ் போர்க் கப்பல் இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு [EEZ] உள்ளே, லட்சத்தீவு தீவுகளுக்கு மேற்கே சுமார் 130 கடல் மைல் தொலைவில் ரோந்து சென்றது உறுதி செய்யப்பட்டிருந்தது.
வெளிப்படையாக சொன்ன அமெரிக்கா
அமெரிக்க உரிமைகள், சுதந்திரம், சர்வதேச சட்டங்களின்படி வழங்கப்பட்டுள்ள உரிமை ஆகியவற்றை இதன் மூலம் உறுதி செய்துள்ளோம். இந்தியா தங்களது எல்லையை தாண்டி "கூடுதலாக கடல்சார் உரிமையை கோருவதை எதிர்க்கும்" வகையில் இந்த ரோந்து அமைந்துள்ளது. இவ்வாறு வெளிப்படையாகவே தெரிவித்திருந்தது அந்த செய்திக்குறிப்பு.
மலபார் பயிற்சி
சமீபத்தில், இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து மலபார் பயிற்சி என்ற பெயரில் வங்க கடலில் கப்பற்படை பயிற்சி மேற்கொண்டனர். சீனாவுக்கு எதிரான முன்னெடுப்பாக இது பார்க்கப்பட்டது. சீனா இந்த பிராந்தியத்தில் கடல்சார் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா ஆஸ்திரேலியா ஜப்பான் இந்தியா நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. எனவே ஓரணியில் திரண்டு இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியபோது, அமெரிக்கா, இந்தியாவின் கடல் பரப்புக்குள் ஊடுருவியது அதிர்ச்சி ஏற்படுத்தியது.
இந்திய நட்பு
இந்த நிலையில், அமெரிக்கா தனது நிலைப்பாட்டில் பவ்யம் காட்டியுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு துறை செய்தித் தொடர்பாளர் இப்போது வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க 7வது ப்ளீட்டைச் சேர்ந்த ஜான் பால் ஜோன்ஸ் இந்திய கடல்பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டது. அமெரிக்கா எப்போதுமே சர்வதேச சட்டங்கள் மற்றும் கடல்சார்ந்த சுதந்திரத்தை மதித்து வந்துள்ளது. அந்த அடிப்படையில்தான், இந்த ரோந்தும் நடைபெற்றது. இந்தியாவுடனான பார்ட்னர்ஷிப்பை அமெரிக்கா மதிக்கிறது. இந்தோ-பசிபிக் பகுதியின் பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் இந்தியாவுடன் நட்புறவை அமெரிக்கா பேணுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறங்கி வந்த அமெரிக்கா
முன்னதாக இந்திய தரப்பு தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தது. சர்வதேச சட்டங்கள்படி, பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு, தொடர்புள்ள நாட்டின் அனுமதி பெறாமல் இப்படி ராணுவ ரோந்து செய்யக் கூடாது என இந்திய தரப்பு கூறியிருந்தது. எனவே, கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க ராணுவ தலைமையகம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் அமெரிக்கா மாலத்தீவு கடல்பகுதியில் கப்பலை செலுத்தியது. ராணுவ பயிற்சி செய்யவில்லை என கூறியிருந்தது. இந்த நிலையில் இப்போது அமெரிக்கா மேலும் ஒருபடி அதிகமாக நட்புக்கரத்தை நீட்டியுள்ளது.