விவசாயிகளுடனான மத்திய அரசின் 7வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி! போராட்டம் தொடர்கிறது
டெல்லி: விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் அரசு நடத்திய 7வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்த நிலையில், வரும் 8ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கடும் குளிர், கொட்டும் மழைக்கு மத்தியில், மத்திய அரசு கொண்டுவந்த 3 விவசாய சட்டங்களை ரத்து செய்ய கோரி 40ஆம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் விவசாயிகள்.
விவசாய பிரதிநிதிகளுடன் மத்திய அரசு இதுவரை 6 சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தியும் பலன் இல்லாத நிலையில், மத்திய அரசு திங்கள்கிழமை நடத்திய ஏழாம் சுற்றுபேச்சுவார்த்தையிலும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்ற விவசாயிகள் சங்கங்களின் கோரிக்கையை ஏற்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கூட்டத்தில் பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் திட்டவட்டமாக கூறிவிட்டாராம். ஆனால் விவசாயிகள் அந்த கோரிக்கையில்ல உறுதியாக உள்ளனர்.
விவசாயத்தில் ஈடுபடும் திட்டமில்லை... ஜியோ டவர்கள் சேதத்தைத் தொடர்ந்து ரிலையன்ஸ் அறிக்கை
இதைத்தொடர்ந்து அடுத்த சுற்று பேச்சுவார்த்தை ஜனவரி 8ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணிவரை இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. 40 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே, வர்த்தகம் மற்றும் உணவு அமைச்சர் பியூஷ் கோயல், பஞ்சாப் நாடாளுமன்ற உறுப்பினரான வர்த்தகத் துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ் ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.