பணக்கார 10 நாடுகளிலேயே 95% கொரோனா தடுப்பூசி பயன்பாடு... மற்ற நாடுகளுக்கு கிடைப்பதில்லை... ஐநா வேதனை
டெல்லி: உலகிலுள்ள டாப் பணக்கார 10 நாடுகளிலேயே 95% கொரோனா தடுப்பூசி பயன்படுத்தப்படுவதாகவும் ஏழை நாடுகளுக்கு தேவையான தடுப்பூசிகள் கிடைப்பதில்லை என்றும் ஐநா வேதனை தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. உருமாறிய கொரோனா வகைகளும் வைரஸ் பரவலை அதிகப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் மட்டுமே ஒரே நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
அதன்படி ஃபைசர், மாடர்னா, ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிகளுக்கு பல்வேறு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன. பிரிட்டன். அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
டாப் பணக்கார 10 நாடுகள்
இந்நிலையில், நாளுக்கு நாள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமானாலும் உலகிலுள்ள டாப் 10 பணக்கார நாடுகளில் மட்டுமே 95% கொரோனா தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுவது வேதனை அளிப்பதாக ஐநாவின் பேரழிவு அபாயத்திற்கான அலுவலகம் தெரிவித்துள்ளது. இது முற்றிலும் தவறான அணுகுமுறை என்றும் அனைத்து நாடுகளிலும் உள்ள முன்களப் பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்றும் ஐநா தெரிவித்துள்ளது.
தடுப்பூசி பயன்பாடு
ஜனவரி 20ஆம் தேதி வரை உலகெங்கும் 5.38 கோடி தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 1.65 கோடி டோஸ்களும் சீனாவில் 1.5 கோடி டோஸ்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அடுத்தபடியாக பிரிட்டன்(50 லட்சம்), இஸ்ரேல்(30 லட்சம்), ஐக்கிய அமீரகம்(21 லட்சம்) ஆகிய நாடுகளில் கொரோனா தடுப்பூசி அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கோவாக்ஸ் திட்டம்
குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உடைய நாடுகளுக்குத் தேவையான கொரோனா தடுப்பூசியை விநியோகம் செய்ய கோவாக்ஸ் என்ற திட்டத்தை உலக சுகாதார அமைப்பு முன்னெடுத்தது. இத்திட்டத்திற்கு 400 கோடி அமெரிக்க டாலர் நிதி தேவைப்படுகிறது. ஆனால், இந்த நிதியைத் திரட்ட முடியாமல் உலக சுகாதார அமைப்பு திண்டாடிவருகிறது. பணக்கார நாடுகள் கோவாக்ஸ் திட்டத்திற்கு அதிக நிதியை அளிக்க வேண்டும் என்றும் ஐநாவின் பேரழிவு அபாயத்திற்கான அலுவலகம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசியில் யாருக்கு முன்னுரிமை
அனைத்து நாடுகளும் முதலில் அதிக ஆபத்தான சூழ்நிலையில் பணிபுரியும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட வேண்டும். அப்போது மட்டுமே சர்வதேச அளவில் கொரோனா பரவலை விரைவில் கட்டுக்குள் கொண்டுவந்து பொருளாதார நடவடிக்கைகளை பழையபடி தொடங்க முடியும் என்றும் ஐநா தெரிவித்துள்ளது. உலகெங்கும் தற்போது வரை 9.80 கோடி மக்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.