சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்தவர் 'ரேபிஸ்ட்'.. சிறைத்துறை விளக்கம்.. ஐயோ.. 'ஜெர்க்' ஆன ஆம் ஆத்மி
டெல்லி: திகார் சிறையில் உள்ள ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மசாஜ் செய்து கொள்வதைப் போல ஒரு வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் அவருக்கு மசாஜ் செய்தவர் 'போக்சோ' குற்றவாளி என்று சிறைச்சாலை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முன்னதாக நேற்று குஜராத்தில் பிரசாரம் மேற்கொண்டிருந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு உடல்நலக் கோளாறு இருப்பதாகவும் எனவேதான் அவர் 'பிசியொதெரபி' எடுத்துக்கொண்டார் எனவும் விளக்கமளித்திருந்தார்.
மேலும், "குஜராத்தின் அமைச்சராக 'அமித்ஷா' பணியாற்றியபோது கைது செய்யப்பட்டிருந்தார். அப்போது அவர்தான் சிறையில் 'விஐபி' சிகிச்சை பெற்றார். ஆம் ஆத்மி ஒன்றும் அப்படிப்பட்ட கட்சியல்ல" என்று கெஜ்ரிவால் விளக்கமளித்திருந்தார். இந்நிலையில் தற்போது திகார் சிறை அதிகாரிகள் மேற்குறிப்பிட்ட தகவலை வெளியிட்டுள்ளனர்.
அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை தொடர்ந்து து.மு. மணீஷ் சிசோடியாவை கைது செய்ய சதி- அரவிந்த் கெஜ்ரிவால்
கைது
டெல்லியின் சுகாதாரத்துறை அமைச்சராக சத்யேந்தர் பணியாற்றி வந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிபிஐ இவர் மீது வழக்குப் பதிவு செய்தது. இதனை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறையும், இவர் மீதும் இவரது மனைவி உட்பட 10 பேர் மீது 'நிதி மோசடி' வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இந்நிலையில் விசாரணைக்கு சத்யேந்தர் ஜெயின் ஒத்துழைக்கவில்லை என்று கூறி அமலாக்கத்துறை கடந்த மே மாதம் இவரையும் இவரது நண்பர்கள் இரண்டு பேரையும் கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தது. இவ்வாறு, இருக்கையில் தனக்கு ஜாமீன் வேண்டும் என்று கோரி கடந்த ஜூன் மாதம் சத்யேந்தர் நீதிமன்றத்தை நாடியிருந்தார். ஆனால் ஜாமீன் மறுக்கப்பட்டது.
நடவடிக்கை
இதனையடுத்து கடந்த 17ம் தேதி மீண்டும் ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்தார். இதற்கிடையில் சிறையில் இவருக்கு சிறையில் சொகுசான வசதிகள் செய்து தரப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அமலாக்கத்துறை இதனை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றது. இது தொடர்பான வீடியோ ஆதாரம் ஒன்றும் வெளியாகின. அதாவது, ஜெயின் படுத்திருப்பதை போலவும், அவரது காலுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மசாஜ் செய்வதை போலவும் அந்த வீடியாவில் காட்சிகள் பதிவாகியிருந்துள்ளன. இதனையடுத்து இந்த வீடியோவை ஆதாரமாக கொண்டு சிறை காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. திகார் சிறை கண்காணிப்பாளர் அஜித் குமார் இந்த விவகாரம் தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பழைய கதை
இதெல்லாம் பழைய கதையாக இருந்தாலும் டெல்லி உள்ளாட்சி தேர்தல் மற்றும் குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் பாஜக இந்த வீடியோவை நேற்று முன்தினம் மீண்டும் வெளியிட்டு இந்த பிரச்னையை பேசுபொருளாக்கியது. இவ்வாறு இருக்கையில், நேற்று(நவ.21) குஜராத்தில் பரப்புரை மேற்கொண்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக மீது கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அதாவது, "குஜராத்தின் அமைச்சராக இருந்த 'அமித்ஷா' கைது செய்யப்பட்டபோது அவருக்குதான் சிறைச்சாலையில் சொகுசு வசதிகள் வழங்கப்பட்டன.
போக்சோ கைதி
சத்யேந்தர் ஜெயின் அப்படிப்பட்டவர் அல்ல. அவருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது. எனவே அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சையின் ஒரு பகுதியாகதான் அவர் 'பிசியோதெரபி' செய்துகொண்டுள்ளார். ஒருவருக்கு வழங்கப்படும் சிகிச்சையை இப்படி குரூரமாக விமர்சிக்க பாஜகவால் மட்டுமே முடியும்" என்று கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது திகார் சிறை அதிகாரிகள் சில தகவல்களை பகிர்ந்துள்ளனர். அதில், அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு சிகிச்சை அளித்த நபர் 'போக்சோ' குற்றவாளி என்று தெளிவுபடுத்தியுள்ளனர். மேலும் அவர் ஒன்றும் 'பிசியோதெரபிஸ்ட்' கிடையாது என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். இதனால் ஆம் ஆத்மிக்கு மேலும் நெருக்கடி முற்றியுள்ளது.
விற்பனை
ஏற்கெனவே நேற்று ஆம் ஆத்மி எம்எல்ஏ ஒருவரை கட்சி தொண்டர்களே தாக்கும் வீடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வீடியோவை குறிப்பிட்டு ஆம் ஆத்மி கட்சி உள்ளாட்சி தொகுதிகளை பணத்திற்காக வேட்பாளர்களிடம் விற்பனை செய்கிறது என்றும் எனவே இதனை எதிர்த்துதான் எம்எல்ஏ மீது தாக்குதல் நடந்திருக்கிறது எனவும் பாஜக விமர்சனம் தெரிவித்திருந்தது. மேலும் ஒவ்வொரு உள்ளாட்சி தொகுதிக்கும் ரூ.80,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அப்பணத்தை கொடுப்பவர்கள் தொகுதியில் வேட்பாளர்களாக களம் இறக்கப்படுவார்கள் என்று பாஜக குற்றம்சாட்டி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.