ஆப்கனில் உச்சகட்ட மோதல்.. திடீரென இந்தியாவுக்கும் விசிட்அடிக்கும் ஆப்கன் ராணுவ ஜெனரல்.. பரபர பின்னணி
டெல்லி: தாலிபான்கள் உடனான மோதல் உச்சமடைந்துள்ள நிலையில், ஆப்கன் ராணுவ தலைமை ஜெனரல் வாலி முகமது அகமதுசாய் வரும் ஜூலை 27ஆம் தேதி இந்தியா வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
ஆப்கனில் அமெரிக்கப் படைகள் இருந்தவரைத் தாலிபான்களின் ஆதிக்கம் இல்லாமல் இருந்தது. இதனால் ஆப்கனில் மெல்ல மெல்ல அமைதியான சூழ்நிலை திரும்பியது.
இந்தச் சூழலில் தான், ஆப்கனில் இருந்த அமெரிக்கா படைகள் மெல்ல திரும்பப் பெறப்பட தொடங்கியது. உடனே தாலிபான்கள் மீண்டும் தங்கள் தாக்குதலைத் தொடங்கினர்.

தாலிபான்கள்
பல்வேறு இடங்களில் தாலிபான்களுக்கும் ஆப்கன் படைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாகக் கடந்த சில நாட்களுக்கு முன் தான், ஆப்கன் - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே அமைந்திருந்த முக்கியமான எல்லை கடக்கும் பகுதியைத் தாலிபான்கள் கைப்பற்றியிருந்தது. இரு நாடுகளுக்கும் இடையே நடக்கும் அதிகமான சரக்கு போக்குவரத்து இந்த பகுதியில் தான் நடக்கிறது. இது ஆப்கன் ராணுவத்திற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா வருகிறார்
மேலும், ஒவ்வொரு நாளும் தாலிபான்கள் புதிய இடங்களைக் கைப்பற்றி வருகிறது. ஆப்கனில் மோதல் உச்சக்கட்டமாக நடைபெறும் இந்தச் சூழலில் அந்நாட்டின் ராணுவ தலைமை ஜெனரல் வாலி முகமது அகமதுசாய் வரும் ஜூலை 27ஆம் தேதி இந்தியா வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் இந்திய ராணுவ தலைமை ஜெனரல் எம் எம் நாரவனே உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். மேலும், அவர் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா உதவி
ஆப்கன் நாட்டின் தொழில்நுட்ப திட்டமிடல் துணை அமைச்சர் ஜூலை 11 -16 வரை இந்தியா வருவதாக இருந்தது. இருப்பினும், கடைசி நேரத்தில் குறிப்பிடாத சில காரணங்களால் அவரது பயணம் தள்ளி வைக்கப்பட்டது. இந்திய ராணுவம் ஆப்கானிஸ்தானுக்கு ராணுவத் தளவாடங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் நான்கு மிக் ரக ஹெலிகாப்டர் உள்ளிட்ட ஏழு ஹெலிகாப்டர்களை ஆப்கன் ராணுவத்திற்கு இந்தியா வழங்கியுள்ளது.

ஆலோசனை
இதுபோக பயிற்சி மையங்களிலும் ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு இந்தியா தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறது. முன்னதாக, கடந்த சில வாரங்களுக்கு முன் தான் ஆப்கன் ராணுவம் தங்களுக்குத் தேவைப்படும் ராணுவத் தளவாடங்களைக் கொண்ட விருப்பப்பட்டியலை அளித்திருந்தது. ஆப்கன் ராணுவ தலைமை ஜெனரல் வாலி முகமது அகமதுசாய் இந்தியாவுக்கு வரும்போது இவை குறித்தும் விவாதிக்கப்படும் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாக். உளவு துறை
ஆப்கனில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே செல்கிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய சொத்துக்கள், இந்திய கட்டிடங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தும்படி தாலிபான்களுக்குப் பாகிஸ்தான் உளவுத்துறை உத்தரவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சூழலில் ஆப்கன் ராணுவ தலைமை ஜெனரலின் வருகை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இந்தியாவிடம் உதவி
அங்கு இரு தரப்பினருக்கும் இடையே ஒருபுறம் மோதல் நடைபெற்று வந்தாலும்கூட, மறுபுறம் தோஹாவில் பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முன்னதாக கடந்த வாரம் தாலிபான்கள் உடனான பேச்சுவார்த்தை தோல்வி அடையும் பட்சத்தில் வரும் காலத்தில் ஆப்கானிஸ்தான் அரசு இந்திய ராணுவ உதவியை நாடலாம் என்று இந்தியாவுக்கான ஆப்கான் தூதர் ஃபரித் மமுண்ட்சே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications