இந்தியாவில் கால் பதிப்பது கன்ஃபார்ம்.. வேலைக்கு ஆள் எடுக்க தொடங்கியது டெஸ்லா நிறுவனம்!
டெல்லி: மின்சார வாகன உற்பத்தியில் முன்னணி வகிக்கும் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் ஆள் எடுக்கும் பணியை தொடங்கியுள்ளது. உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கின் நிறுவனமான இந்த டெஸ்லா, வாடிக்கையாளர்கள் சேவை உள்ளிட்ட 13 ரோல்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. லிங்க்ட் இன் விளம்பரத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மோடி எலான் மஸ்க் சந்திப்பு நடந்த சில நாட்களிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் மின்சார கார் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நிறுவனம் டெஸ்லா. உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கின் இந்த டெஸ்லா நிறுவனம் அமெரிக்கா மட்டும் இன்றி பல்வேறு நாடுகளிலும் தனது நிறுவன கார்களை உற்பத்தி செய்து வருகிறது. புவி வெப்ப மயமாதல், காற்று மாசு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை பெட்ரோல், டீசல் கார்களுக்கு மாற்றாக எலக்ட்ரிக் கார்கள் பக்கம் மக்களின் கவனம் திரும்பியுள்ளது.

ஆள் எடுக்கும் பணியை தொடங்கிய டெஸ்லா
இதனால், மின்சார கார்கள் தேவை அதிகரித்துள்ள நிலையில், டெஸ்லா மின்சார கார் உற்பத்தியில் பெரும் பங்கை வகிக்க தொடங்கியது. எனினும், இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் இதுவரை கால் பதிக்கவில்லை. இறக்குமதி வரி அதிகமாக இருப்பதாக எலான் மஸ்க் கூறி வந்த நிலையில் இந்தியாவிலேயே கார் உற்பத்தியை தொடங்கவும் திட்டமிட்டு இருப்பதாக கூறி வந்தார்.
இத்தகைய சூழலில் தான் இந்தியாவில் ஹை எண்ட் கார்களுக்கான அடிப்படை சுங்க வரி 110 சதவீதத்தில் இருந்து 70 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் இந்தியாவில் வேலைக்கு ஆள் எடுக்கும் பணியை டெஸ்லா நிறுவனம் தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் சேவை உள்ளிட்ட 13 ரோல்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது டெஸ்லா. லிங்க்ட் இன் விளம்பரத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மோடியை சந்தித்து பேசிய சூழலில்
இதன் மூலம் இந்திய சந்தையில் டெஸ்லா நிறுவனம் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து இருப்பதாக தெரிகிறது. அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடியை எலான் மஸ்க் சந்தித்து பேசியிருந்தார். இந்த சந்திப்பு நடைபெற்ற சில நாட்களிலேயே டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் ஆள் எடுக்கும் பணியை தொடங்கியிருப்பது கவனிக்கத்தக்கது. மும்பை மற்றும் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் பணியிடங்கள் இருக்கும் எனவும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஆண்டு துவக்கத்திலேயே டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்ய இருப்பதாக பேச்சு எழுந்தது. இது தொடர்பாக பிரதமர் மோடியை டெஸ்லா நிறுவனர் சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஏப்ரல் மாதம் சந்திப்பு நடைபெறுவதாக சொல்லப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் எலான் மஸ்கின் இந்திய வருகை ரத்தானது.
விற்பனை எப்படி இருக்கும்
அதன்பிறகு தற்போது மீண்டும் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் கால் பாதிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டியிருப்பது தெரியவந்துள்ளது. ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கும் நிலையில் இந்தியாவில் டெஸ்லா நுழைவது கிட்டத்தட்ட உறுதியாகியிருப்பதாக சந்தை நிபுணர்கள் கூறுகிறார்கள்.
டெஸ்லா நிறுவனத்தின் கார் விற்பனை கடந்த ஆண்டு சரிவை சந்தித்தது. இதனால், சந்தையை விரிவுபடுத்தும் பணியை டெஸ்லா தீவிரப்படுத்தியுள்ளது. இந்தியாவில் எலக்ட்ரானிக் கார்கள் விற்பனை இன்னும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இருந்தாலும் வரும் காலங்களில் எலக்ட்ரானிக் கார்கள் விற்பனை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications