தேர்தல் பத்திரம் செல்லாது தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு அவசர சட்டமா? மீண்டும் நிதி பெற முடியுமா?
டெல்லி: மத்திய பாஜக அரசின் தேர்தல் பத்திரம் திட்டம் செல்லாது; அரசியல் சட்டத்துக்கே எதிரானது என உச்சநீதிமன்றம் அதிரடியான தீர்ப்பு அளித்தது. அத்துடன் பாரத ஸ்டேட் வங்கியானது தேர்தல் பத்திரம், நன்கொடை விவரங்கள் அனைத்தையும் பகிரங்கப்படுத்தவும் உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புகு எதிராக தேர்தல் பத்திரம் செல்லும் என்ற வகையில் மத்திய அரசு அவசர சட்டத்தை கொண்டு வர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
மத்தியில் ஆளும் பாஜக அரசால் 2018-ல் தேர்தல் பத்திரம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்தல் பத்திரத் திட்டத்தின்படி, தேர்தல் பத்திரங்களை இந்தியக் குடிமகனாக இருக்கும் நபர் அல்லது இந்தியாவில் இணைக்கப்பட்ட அல்லது நிறுவப்பட்ட ஒரு நபர் வாங்கலாம். ஒரு நபர் தனியாகவோ அல்லது பிற நபர்களுடன் கூட்டாகவோ தேர்தல் பத்திரங்களை வாங்க முடியும். தேர்தல் பத்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட வங்கியில் உள்ள வங்கிக் கணக்கு மூலம் மட்டுமே தகுதியான அரசியல் கட்சியால் பணமாக்க முடியும்.

தேர்தல் பத்திரங்கள் வழக்கு: தேர்தல் பத்திரங்கள் மூலம் யார் யார் நன்கொடை கொடுத்தார்கள்? என்பது தொடர்பான விவரங்கள் வாக்காளர்களுக்கு தெரியப்படுத்த முடியாது. இது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் இன்று ஒருமித்த தீர்ப்பளித்தது. மத்திய பாஜக அரசின் தேர்தல் பத்திரம் திட்டமே செல்லாது; அரசியல் சட்டத்துக்கு எதிரானது என அதிரடியாக உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு: மேலும் தேர்தல் பத்திரங்கள் திட்டம் மட்டுமே கறுப்பு பணத்தை ஒழிக்க உதவாது; அரசை கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டு. பாரத ஸ்டேட் வங்கி, தேர்தல் பத்திரங்களை வழங்குவதை உடனே நிறுத்த வேண்டும்; தேர்தல் பத்திரங்கள், தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை கொடுத்தவர்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் பாரத ஸ்டேட் வங்கி மார்ச் 6-ந் தேதிக்குள் பகிரங்கப்படுத்த வேண்டும்; தேர்தல் பத்திரம் திட்டத்துக்காக கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது சட்டவிரோதம்; தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை கொடுத்தோர் விவரங்களை அறிய முடியாது என்பது வாக்காளர்களின் அடிப்படை உரிமையை மீறுவதாகும் என்பதும் உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பாகும்.
டெல்லி அவசர சட்டம்: இந்த நிலையில் மத்தியில் ஆளும் பாஜக அரசானது உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை செல்லாததாக்கும் வகையில் தேர்தல் பத்திரங்களை செல்லுபடியாக்கும் வகையில் அவசர சட்டத்தை கொண்டு வர வாய்ப்புள்ளது என்கின்றன அரசியல் வட்டாரங்கள். டெல்லி அதிகாரிகள் நியமனம் தொடர்பான வழக்கில், அதிகாரிகள் நியமனம் குறித்த அதிகாரம் டெல்லி மாநில அரசுக்குதான் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு மத்திய அரசுக்கு பின்னடைவாக இருந்தது. இதனால் டெல்லி அதிகாரிகள் நியமனம் தொடர்பான அதிகாரம் மத்திய அரசுக்குதான் உள்ளது என்பதற்கான அவசர சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது மத்திய அரசு.
தேர்தல் ஆணையர் நியமன விவகாரம்: அதே போல இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் மற்றொரு அதிரடி தீர்ப்பு கொடுத்தது. அதில், தலைமை தேர்தல் ஆணையர்- தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இடம் பெற வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கும் எதிராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இல்லாமல் மத்திய அமைச்சர் ஒருவர் இடம் பெறும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வழக்குகளும் தொடரப்பட்டன. ஆனால் உச்சநீதிமன்றம் கடைசியாக மத்திய அரசின் இந்த சட்டத்துக்கு தடை விதிக்க மறுத்தது.
தேர்தல் பத்திரத்துக்கு அவசர சட்டமா?: இதே அடிப்படையில் டெல்லி விவகாரம், தேர்தல் ஆணையர் நியமனம் ஆகியவற்றைப் போல தேர்தல் பத்திரம் தொடர்பாகவும் உச்சநீதிமன்றம் இப்போது மத்திய அரசுக்கு எதிராகவே தீர்ப்பளித்துள்ளது. ஆனால் மத்திய அரசு இதனை ஏற்க மறுத்து தேர்தல் பத்திரங்களை செல்லுபடியாக்கும் வகையில் அவசர சட்டத்தைக் கொண்டு வர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் மத்திய அரசு இப்படி ஒரு அவசர சட்டத்தைக் கொண்டு வந்துவிட்டால் அரசியல் கட்சிகள் மீண்டும் தேர்தல் பத்திரங்களை பயன்படுத்தி நன்கொடை நிதி பெற முடியும் எனவும் டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. லகான் இப்போது மத்திய பாஜக அரசு கையில்தான்!












Click it and Unblock the Notifications