பற்றி எரிந்த பாஜக அலுவலகம்! அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக களமிறங்கிய இளைஞர்கள்! பீகாரில் தீவைப்பு
டெல்லி: மத்திய அரசின் புதிய அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டம் தொடர்ந்து உக்கிரமடைந்து வருகிறது.
Recommended Video
இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் ராணுவம், விமானப்படை, கப்பற்படை ஆகியவை என முப்படைகள் உள்ளன. இந்த முப்படைகளுக்கும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது.
இந்தச் சூழலில் மத்திய அரசின் புதிய ராணுவ ஆட்சேர்பு கொள்கை அக்னிபாத் திட்டம் நேற்று முன் தினம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கான அறிவிப்பை ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.

அக்னிபாத் திட்டம்
அக்னிபாத் திட்டம் மூலம் ராணுவம், கடற்படை, விமானப்படைக்கு ஆள்சேர்ப்பு நடைபெறும். 17.5 வயது முதல் 21 வயதுக்குள் உள்ளவர்கள் இதில் சேரலாம். இவர்கள் அக்னிவீர் என அழைக்கப்படுவர். இத்திட்டத்தில் ஒருவர் நான்கு ஆண்டுகள் பணியில் இருக்கலாம். இதன் மூலம் ராணுவத்துக்கு தேர்ந்தெடுக்கப்பவருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே பணி வழங்கப்படும். நான்ரு ஆண்டுகள் முடிந்த பிறகு, 80% பேர் ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்படுவர். 20% மட்டும் பேர் ராணுவப் பணியைத் தொடர முடியும்.

ஊதியம்
நாட்டின் பாதுகாப்புப் படைகளின் செலவின குறைப்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக அக்னிபாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அக்னிபாத் திட்டம் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் ராணுவ செலவு குறையும். 4 ஆண்டுகள் முடிந்ததும் அக்னி வீரர்களுக்குச் சேவா நிதி என்ற ஒரு முறை தொகுப்பு வழங்கப்படும். முதலாம் ஆண்டில் மாதாந்திர ஊதியமாக ரூ,30,000 நிர்ணயிக்கப்படும். அக்னி வீரர் தொகுப்பு நிதிக்கு ரூ.9,000 அளிக்கப்படும். எஞ்சிய ரூ.21,000 கையில் கிடைக்கும்.

எதிர்ப்பு
இரண்டாம் ஆண்டில் ரூ.33,000, மூன்றாம் ஆண்டில் ரூ.36,500, நான்காம் ஆண்டில் ரூ.40,000 ஊதியம் வழங்கப்படும். இதில் 30% பங்களிப்புத் தொகையாகப் பிடிக்கப்படும். 4 ஆண்டுகளுக்குப் பின்னர் தொகுப்பு நிதியில் செலுத்தப்பட்ட ரூ.5.02 லட்சம் மற்றும் அரசு பங்களிப்புடன் சேர்ந்து சேவா நிதியாக ரூ.11.71 லட்சம் வீரர்களுக்கு வழங்கப்படும். மத்திய அரசின் இந்தப் புதிய திட்டத்தை ஒரு தரப்பினர் வரவேற்றாலும் மற்றொரு தரப்பினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பாஜக அலுவலகம்
குறிப்பாகப் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராகப் போராட்டத்தில் குதித்து உள்ளனர். போராட்டத்தின் ஒரு பகுதியாகப் பீகாரின் நவாடா மாவட்டத்தில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்திற்கு மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டது. அட்டாவா சாலையில் அமைந்துள்ள பாஜக கட்சி அலுவலகத்திற்குள் டயர்கள் எரிக்கப்பட்டன. இந்த சம்பவத்தால் யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. தீ விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தீ வைப்பு
இந்த தீ வைப்பு சம்பவத்தால் பாஜக அலுவலகத்தில் உள்ள மரச்சாமான்கள், உபகரணங்கள், காகிதங்கள் போன்றவை எரிந்து சாம்பல் ஆனதாக பாஜக மாவட்டத் தலைவர் சஞ்சய்குமார் முன்னா தெரிவித்தார். பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்துள்ளன. இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "இதுபோன்ற செயல்கள் நியாயமானது அல்ல. நகரில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் வந்து அலுவலகத்தைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவது திட்டமிட்ட சதி. மூத்த தலைவர்களிடம் புகார் தெரிவிக்கப்படும்" என்று சஞ்சய்குமார் முன்னா தெரிவித்தார்.

பாஜக
அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அங்கிருந்த பொருட்களுக்கு தீ வைத்துக் கொளுத்தியதாக ஊழியர்கள் தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகம் போராட்டத்தைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக விட்டதே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என சஞ்சய் குமார் முன்னா கூறினார். இது தொர்பாக ஃபோட்டோ மற்றும் வீடியோவும் இணையத்தில் வைரலானது.

போராட்டம்
பீகார் மற்றும் ராஜஸ்தான் முழுவதும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்துள்ளன. பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியம் விவகாரத்தில் பிரச்சினை உள்ளதாக ராணுவ வேலை தேடுபவர்கள் தெரிவித்தனர். மத்திய அரசின் திட்டத்திற்கு எதிராகப் பல மாணவர்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர். போராட்டத்தைக் கட்டுப்படுத்த களமிறக்கப்பட்ட பாதுகாப்புப் படையினர் மீது கற்களும் வீசப்பட்டதாகப் பீகார் அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications