முத்தலாக் சட்ட மசோதாவிற்கு லோக்சபாவில் அதிமுக எதிர்ப்பு.. அரசியல் சாசனத்திற்கு எதிரானது என கண்டனம்
டெல்லி: முத்தலாக் சட்டத்தை இப்போதைய வடிவில் ஏற்றுக்கொள்ள முடியாது என்று லோக்சபாவில் அதிமுக எம்பி அன்வர் ராஜா தெரிவித்தார். முத்தலாக் சட்ட மசோதாவை தேர்வுக் குழுவிற்கு அனுப்பி மாற்றியமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
முத்தலாக் சட்ட மசோதா மீதான விவாதம் இன்று லோக்சபாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்று முறை தலாக் சொல்லி மனைவியை விவாகரத்து செய்யும் ஆணுக்கு, அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறையில் அடைக்க இந்த சட்ட மசோதா வகை செய்கிறது.
இந்த சட்ட மசோதா மீதான விவாதத்தில் பாஜக எம்பிக்கள் மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அந்தந்தக் கட்சியினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இரு வேறு கருத்துக்கள்
லோக்சபா விவாதத்தின்போது பாரதிய ஜனதா கட்சி எம்பிக்கள் இந்த சட்டத்தை வரவேற்று பேசிய நிலையில், எதிர்க்கட்சியினர் இந்த சட்டத்தை அமல்படுத்த கூடாது என்றும் அல்லது தேர்வு கமிட்டிக்கு அனுப்பி வைத்து சட்டத்தை பரிசீலனை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினர். அதிமுக சார்பில் அன்வர் ராஜா எம்.பி., பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதிமுக எம்.பி. அன்வர் ராஜா
அன்வர் ராஜா பேசுகையில் முத்தலாக் சட்டம் என்பது இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இந்த நாட்டின் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க கூடியது இந்த வடிவத்திலேயே, அதிமுக இச்சட்ட மசோதாவை ஏற்க தயாராக இல்லை. எனவே தேர்வு கமிட்டிக்கு சட்ட மசோதாவை அனுப்பி வைக்க வேண்டும், அல்லது, சட்ட மசோதாவை கைவிட வேண்டும். இதே வடிவத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டால் அது பல குடும்பங்களை அழித்து விடும். கணவர் சிறைக்கு அனுப்பப்பட்டால், மனைவியை, குழந்தைகளை யார் பராமரிப்பார்கள்? அந்த குடும்பத்திலுள்ள பிறரை யார் கவனிப்பார்கள் என்பது குறித்தெல்லாம் இந்த சட்டம் கவலைப்படவில்லை.
முத்தலாக் காரணம் இல்லை
இந்த சட்டத்தில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வரும், துணை முதல்வரும் வற்புறுத்தி இருந்தனர். ஆனால் அதை அரசு கண்டுகொள்ளவில்லை. இந்தியாவில் முஸ்லிம்களின் கல்வி பொருளாதார நிலை குறித்து பல்வேறு ஆய்வுகள் வெளியாகியுள்ளன. கடந்த 60 ஆண்டுகளில் வெளியான எந்த ஒரு ஆய்விலும் கூட முத்தலாக் நடைமுறை அவர்களின் பின்தங்கிய நிலைக்கு காரணம் என்று கூறவில்லை.
ஜனநாயகத்திற்கு எதிரானது
முத்தலாக் சட்டத்திற்கு எதிராக நாடு முழுக்க இரண்டு கோடிக்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் போராட்டத்தை நடத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். எனவே இந்த சட்டம் ஜனநாயகத்திற்கு எதிரானது. இது ஒரு கண்துடைப்பு மட்டுமே. இவ்வாறு அவர் தெரிவித்தார்.