எடப்பாடியின் இடைவிடாத பல்டி.. நேற்று 3 முறை கூட்டணி மாற்றம்- இன்று பிரதமர் மோடியுடன் தூதர் சந்திப்பு
டெல்லி: ஒரே நாளில் கூட்டணியின் பெயரை 3 முறை மாற்றிய அதிமுக இபிஎஸ் கோஷ்டியின் தூதராக இன்று பிரதமர் மோடியை தம்பிதுரை எம்பி சந்தித்து பேசினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்து வருகின்றன.
அதிமுகவோ இபிஎஸ், ஓபிஎஸ் என இரு அணிகளாக பிளவுபட்டுள்ளன. அத்துடன் பாஜகவையும் சமாளித்தாக வேண்டிய கட்டாயத்தில் இரு கோஷ்டிகளும் இருக்கின்றன. அதிமுகவின் இரு கோஷ்டிகளும் பாஜகவின் ஆதரவை முதலில் கோரின. இதற்காக பாஜக தலைமை அலுவலகத்துக்கு நேரில் சென்று பாஜகவின் ஆதரவை கேட்டன இரு கோஷ்டிகள்.
பின்னர் அதிமுக- பாஜக கூட்டணியில் சில கட்சிகள் பாஜக நிலைப்பாட்டைத்தான் ஆதரிப்போம் என்றன. அதிமுகவின் ஓபிஎஸ் கோஷ்டியும் கூட பாஜக போட்டியிட்டால் ஆதரவு; பாஜகவுக்கு தேர்தல் பணி செய்ய தேர்தல் பணிக்குழு என்றெல்லாம் அறிவித்தது.
இந்நிலையில் திடீரென அதிமுக இபிஎஸ் கோஷ்டி, முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசுவை வேட்பாளர் என அறிவித்தது. அத்துடன் நிற்காமல் தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்ற புதிய கூட்டணியை அறிவித்தது. இதன் தேர்தல் அலுவலகத்தில் பாஜக தலைவர்கள் படம் இடம்பெறவில்லை. அத்துடன் அதிமுக இபிஎஸ் அணி வேட்பாளரை ஆதரிப்பதாக அறிவித்த டாக்டர் கிருஷ்ணசாமி, ஜிகே வாசன், பூவை ஜெகன் ஆகியோரது படங்கள் மட்டுமே இடம்பெற்றன. இதனால் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து அதிமுக இபிஎஸ் அணி வெளியேறிவிட்டதாகவே இது பார்க்கப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, உரிய முறையில் பதில் கொடுப்போம் என்றார்.
இதனைத் தொடர்ந்து அதிமுக ஓபிஎஸ் அணியும் ஒரு வேட்பாளரை அறிவித்தது. ஆனால் பாஜக வேட்பாளரை அறிவித்தால் வாபஸ் பெறுவோம் என கூறியது ஓபிஎஸ் கோஷ்டி. இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டால் தனி சின்னத்தில் போட்டியிடுவோம் என்றது ஓபிஎஸ் அணி.
இந்த பரபரப்புகளுக்கு நடுவே தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற பெயரை திடீரென தேசிய ஜனநாயக கூட்டணி என்றே திருத்தியது இபிஎஸ் கோஷ்டி. இதனால் பாஜக தலைமையிலான கூட்டண்இயில்தான் அதிமுக இபிஎஸ் கோஷ்டி இருக்கிறதா? என்கிற கேள்வி எழுந்தது. அதேநேரத்தில் பாஜக தலைவர்கள் படம் இடம்பெறவில்லை. இதனால் அதிமுக இபிஎஸ் கோஷ்டியின் நடவடிக்கைகள் குழப்பத்தை ஏற்படுத்தின. பின்னர் ஒரே நாளில் 3-வது முறையாக அதிமுக கூட்டணி என்ற பெயரை சூட்டியது இபிஎஸ் கோஷ்டி.
இந்நிலையில் இன்று மாலை டெல்லிக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செல்ல இருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பின்னணியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை அதிமுக இபிஎஸ் கோஷ்டியின் தம்பிதுரை எம்பி திடீரென சந்தித்து பேசினார். ஆனால் மத்திய பட்ஜெட்டு வரவேற்பு தெரிவித்துதான் இந்த சந்திப்பு நடந்தது என்கிறது இபிஎஸ் கோஷ்டி. இப்போதைக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இபிஎஸ் கோஷ்டி இருக்கிறதா? இல்லையா? என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.