குஜராத்தில் நாளை மாநில சட்ட அமைச்சர்கள், ராஜஸ்தானில் மாநில மின்துறை அமைச்சர்கள் மாநாடு!
டெல்லி: குஜராத்தில் மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ள மாநில சட்ட அமைச்சர்கள், சட்டத்துறை செயலாளர்களின் 3 நாட்கள் மாநாடு நாளை தொடங்க உள்ளது. அதேபோல் ராஜஸ்தானில் மாநில மின் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு நாளை தொடங்க உள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டத்துறை அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்களின் மாநாடு அக்டோபர் 14, தேதி தொடங்கி, அக்டோபர் 16, 2022 வரை குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் நடைபெற உள்ளது. இதில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ முக்கிய உரையாற்ற உள்ளார்.

சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் இந்த முன்னெடுப்பு மூலம் இந்திய சட்டமுறை தொடர்பான பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற உள்ளன. மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்களது சிறந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ள சிறந்த தளமாக இது அமையும்.
ராஜஸ்தான் மாநாடு
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர்களின் இரண்டு நாள் மாநாடு ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் அக்டோபர் 14 (நாளை) மற்றும் 15-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. மத்திய எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் ஆர். கே. சிங் நாளை மாநாட்டைத் தொடங்கி வைப்பார்.
ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், மத்திய எரிசக்தி மற்றும் கனரக தொழில்கள் துறை இணையமைச்சர் கிருஷன் பால் குர்ஜர், மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உரங்கள் மற்றும் ரசாயனத் துறை இணையமைச்சர் பகவாந்த் கூபா ஆகியோருடன் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர்கள், செயலாளர்கள் உள்ளிட்டோர் மாநாட்டில் கலந்து கொள்வார்கள். இவர்களுடன், அமைச்சகங்களின் உயர் அதிகாரிகளும், எரிசக்தித் துறையில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்களும் இதில் பங்கேற்பார்கள்.
மின்சார உற்பத்தி நிறுவனங்களின் நம்பகத்தன்மை, திறன்மிகு கணக்கீடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியும் சேமிப்பும், எரிசக்தித் துறை சீர்திருத்தங்கள், உரிய நேரத்தில் முதலீடு செய்வதன் வாயிலாக 24 மணி நேரமும் மின்சார விநியோகத்தை உறுதி செய்தல், மின்சார நுகர்வோரின் உரிமைகள், 2030-ஆம் ஆண்டில் எரிசக்தி அமைப்புமுறை, எரிசக்தி பாதுகாப்பு போன்ற விஷயங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும்.எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் எரிசக்தி நிதி கழகத்தின் 2020-21 நிதி ஆண்டிற்கான எரிசக்தி நிறுவனங்களின் செயல்திறன் குறித்த அறிக்கை நிகழ்ச்சியில் வெளியிடப்படும்.












Click it and Unblock the Notifications