2 நாள் தாமதம்.. ஜூன் 3ல் கேரளாவில் தொடங்குகிறது தென்மேற்கு பருவ மழை.. ஐஎம்டி தகவல்
டெல்லி: இந்தியாவில் இந்த ஆண்டு தென் பருவமழை தொடங்குவது இரண்டு நாட்கள் தாமதமாகி உள்ளது. ஜூன் 3 ம் தேதி தான் கேரள கடற்கரை பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) வானிலை மாற்றங்களை மேற்கோள் காட்டி இன்று கூறியுள்ளதாவது: "சமீபத்திய வானிலை அறிகுறிகளின்படி, ஜூன் 1 முதல் தென்மேற்கு காற்று மேலும் படிப்படியாக வலுப்பெறக்கூடும், இதன் விளைவாக கேரளாவில் மழைப்பொழிவு அதிகரிக்கும். எனவே, கேரளா மீது தென் மேற்கு பருவமழை தொடங்குவது ஜூன் 3ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளது," என்று கூறியுள்ளது.
ஜூன் 3 முதல் கேரளா மற்றும் மஹே பகுதிகளில் மிக தீவிரமான கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் டாக்டர் எம் மொஹாபத்ரா இதுகுறித்து கூறுகையில், பஞ்சாப் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் சராசரி கடல் மட்டத்திலிருந்து 1.5 கிலோமீட்டர் வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்கிறது. இதேபோல் கர்நாடக கடற்கரையில் கடல் மட்டத்திலிருந்து 3.1 கிலோமீட்டர் தொலைவிலும். கிழக்கு-மத்திய அரேபிய கடலுக்கு மேல் மேலடுக்கு சுழற்சி உள்ளது. தற்போது தென்மேற்கு காற்று பலம அடையவில்லை. இதனால் பருவமழை தாமதமாகிவிட்டது, ஜூன் 1 முதல் கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை மேம்படத் தொடங்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஜூன் 3 முதல் கேரளா மீது பருவமழை தொடங்கும்" என்றார்.
இந்தியாவின் விவசாய நிலங்களில் கிட்டத்தட்ட பாதிக்கு நீர்ப்பாசனம் இல்லை. அரிசி, சோளம், கரும்பு, பருத்தி மற்றும் சோயாபீன்ஸ் போன்ற பயிர்களை வளர்ப்பதற்கு ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்யும் தென்மேற்கு பருவ மழையையே மக்கள் நம்பி இருக்கிறார்கள்.
கடந்த மாதம், வானிலை மையம், இந்த ஆண்டு பருவமழை சராசரியாக இருக்கும் என்று கூறியது, இந்த அறிவிப்பு நாட்டின் பொருளாதாரத்தின் மையமான வேளாண் உற்பத்தியின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவ மழை கேரளாவில் பெய்தால் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டஙகளில் எதிரொலிக்கும் என்பதால், தென்மேற்கு பருவ மழை குறித்த எதிர்பார்ப்பு தமிழகத்திலும் அதிகமாக உள்ளது,