கிராஸ் வோட்டிங் செய்த 25 எம்.பிக்கள்? - எதிர்க்கட்சி வேட்பாளர் ஷாக்.. எதிர்பார்த்த ஓட்டே கிடைக்கலயே!
டெல்லி : குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் 25க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பிக்கள் கட்சி மாறி வாக்களித்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் 14-வது குடியரசுத் துணைத் தலைவராக பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜெகதீப் தன்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மார்கரெட் ஆல்வா 182 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்துள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, அடுத்த குடியரசுத் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது.
இதில், பாஜக கூட்டணி சார்பில், மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜெகதீப் தன்கர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மார்கரெட் ஆல்வா போட்டியிட்டார்.

துணை குடியரசுத் தலைவர் தேர்தல்
துணை குடியரசுத் தலைவர் தேர்தலில், மக்களவை உறுப்பினர்கள் 543 பேர், மாநிலங்களைவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 233 உறுப்பினர்கள், 12 நியமன உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள் என மொத்தமுள்ள 788 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கலாம். இதில் 8 எம்.பி இடங்கள் காலியாக உள்ளன. எனவே இந்த தேர்தலில் மொத்தம் 780 வாக்குகள் இருந்தன.

பாஜக ஆதரவு
இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணிக்கு சுமார் 515 எம்.பிக்களின் ஆதரவு உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் ஜெகதீப் தன்கருக்கு பாஜக எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி எம்.பி.க்கள் வாக்களித்தாலே போதும், அவர் எளிதில் வெற்றி பெறுவார் என்ற நிலை இருந்தது.

எதிர்க்கட்சி வேட்பாளர்
காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவுக்கு திமுக, தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி, பகுஜன் சமாஜ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்திருந்தன. திரிணாமூல் காங்கிரஸைச் சேர்ந்த 36 எம்பிக்கள் இந்தத் தேர்தலில் பங்கேற்க போவதில்லை என அறிவித்திருந்தனர்.

725 பேர் வாக்குப்பதிவு
குடியரசுத் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாடாளுன்ற வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு வாக்கு பதிவு நிறைவடைந்ததும், வாக்குப்பெட்டி சீல் வைக்கப்பட்டது. பின்னர், மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மொத்தமுள்ள 780 வாக்காளர்களில், 725 பேர் வாக்களித்திருந்தனர். அதாவது மொத்தம், 92.94 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியிருந்தன.

ஜெகதீப் தன்கர் வெற்றி
பதிவான வாக்குகளில் 15 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டது. பதிவான வாக்குகளில் ஜெகதீப் தன்கர் 528 வாக்குகள் பெற்றிருந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்கட்சிகளின் வேட்பாளர் மார்கரெட் ஆல்வா 182 வாக்குகள் பெற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து நாட்டின் 14வது குடியரசுத் துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் அறிவிக்கப்பட்டார்.

கிராஸ் வோட்டிங்
திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்தது. இந்த நிலையில் கட்சி உத்தரவையும் மீறி 2 திரிணாமுல் எம்பிக்கள் இந்த தேர்தலில் வாக்களித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லோக்சபா எம்.பி.க்கள் சிசிர் அதிகாரி மற்றும் அவரது மகன் திபியேந்து ஆகியோர் அதிகாரப்பூர்வமாக டி.எம்.சி எம்.பி.க்கள். ஆனால் 2021ஆம் ஆண்டு நடந்த மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, சிசிர் அதிகாரியின் மூத்த மகன் சுவேந்து அதிகாரி பாஜகவுக்கு மாறியதிலிருந்து, எம்.பிக்கள் இருவரும் கட்சியுடன் இணக்கமாகச் செயல்படவில்லை. எனவே அவர்கள் இருவரும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்ததாக் தகவல் வெளியாகியுள்ளது.

கிராஸ் வோட்டிங்
அதேநேரம், எதிர்பார்த்த வாக்குகளை விட ஜெகதீப் தன்கருக்கு அதிகமான வாக்குகள் பதிவாகியிருப்பதால் இவர்கள் மட்டுமல்லாது சுமார் 25 எம்.பிக்கள் கிராஸ் வோட்டிங் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வா 206 வாக்குகளைப் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் 182 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். இதனால், சுமார் 25 எம்.பிக்கள் கட்சி உத்தரவை மீறி கிராஸ் வோட் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த தகவல்கள் இனிமேல்தான் தெரியவரும்.












Click it and Unblock the Notifications