எந்த திருத்தத்தையும் செய்ய தயார்.. போராட்டத்தால ஒன்னும் நடக்காது... வேளாண் அமைச்சர் திட்டவட்டம்
டெல்லி: விவசாயிகள் போராட்டம் 100 நாட்களை கடந்துள்ள நிலையில், சட்டங்களில் எவ்வித திருத்தங்களையும் மேற்கொள்ளத் தயாராகவுள்ளதாக வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் கடந்த ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி தொடங்கிய விவசாயிகள் போராட்டம் 100ஆவது நாளை கடந்தும் தொடர்கிறது. டிசம்பர் மாதம் கடும் குளிரில் தொடங்கிய போராட்டம் தற்போது மூன்று மாதங்களைக் கடந்துள்ளது.
'பூத் ஸ்லிப்’பில் அதிரடி மாற்றம். தேர்தல் ஆணையம் வெளியிட்ட அடுத்த அறிவிப்பு
விவசாயிகள் எதற்கும் தயாராக உள்ளதாகவும் அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை, ஒரு அங்குலம் கூட நகர மாட்டோம் என்றும் போராட்டத்தில் பங்கேற்றுள்ள விவசாயச் சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் சமீபத்தில் கூறியிருந்தார்.
தயார்
இந்நிலையில், ஐந்தாவது தேசிய அக்ரிவிஷன் மாநாட்டின் பேசிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், "போராடும் விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து இந்த சட்டங்களில் எவ்வித திருத்தங்களையும் மேற்கொள்ள மத்திய அரசு தயாராகவே உள்ளது. இதற்காக இச்சட்டங்களில் குறைகள் உள்ளது என்று அர்த்தமில்லை" என்றார்.
பயன் தராது
மத்திய அரசின் மூன்று சட்டங்கள் சந்தையில் விவசாய பொருட்களை அதிக விலையில் விற்பனை செய்ய உதவும் என்றும் இவை விவசாய துறையில் முதலீட்டை அதிகரிக்கும் என்றும் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார். தலைநகரில் நடைபெறும் இந்தப் போராட்டம் விவசாயிகளின் நலனை எந்த விதத்தில் பாதுகாக்கும் என்பதைப் பற்றிப் பேச இங்கு யாரும் தயாராக இல்லை என்றும் அவர் கூறினார். மேலும், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகளையும் அவர் சாடினார்.
உடன்பாடு இல்லை
மத்திய அரசு கடந்த ஆண்டு, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் விவசாய சட்டங்களை நிறைவேற்றியது. அப்போது முதலே பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் தொடங்கியது. இது தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.
உச்ச நீதிமன்றம் உத்தரவு
கடைசியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும்கூட விவசாய சட்டங்களை 18 மாதங்கள் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. இருப்பினும், சட்டங்களை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். இது தொடர்பாக வழக்கில், விவசாய சட்டங்களை அமல்படுத்தத் தடை விதித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக ஆய்வு செய்யக் குழு ஒன்றையும் அமைத்தது.